98
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்பாதுகாவலரின் இறுதி கிரியைகள் சிலாபத்தில் எதிர்வரும் புதன் கிழமை நடைபெற உள்ளதனால் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) விசாரணைகள் எதிர்வரும் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 26ஆம் திகதி நடைபெற இருந்த வழக்கு விசாரணைகள் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) விசாரணை நீதிபதிகளில் ஒருவரான மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரின் இறுதி கிரியைகள் நடைபெற உள்ளதனால் , அன்றைய தினம் நடைபெற இருந்த விசாரணைகள் யாவும் எதிர்வரும் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்.நல்லூர் பின் வீதியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து இருந்தார். மற்றுமொரு மெய் பாதுகாவலர் காயமடைந்து இருந்தார். உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் புதன் கிழமை சிலாபத்தில் நடைபெற உள்ளதனால் , நீதிபதிகள் , நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் , நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கு சிலாபம் செல்ல உள்ளனர் என மன்று தெரிவித்தது.
Spread the love