பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அசௌகரியங்களை கவனத்திற் கொண்டு உடனடியாக சேவைக்கு திரும்புமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சில கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் நேற்று (25) முதல் ஆரம்பித்திருக்கும் பணி பகிஷ்கரிப்பின் காரணமாக நாட்டில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரச்சினைகள் இருக்குமானால் பேச்சுவார்த்தையின் மூலம் அவற்றை தீர்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பங்ளை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சேவைக்கு திரும்பாதவர்கள் சேவையை விட்டுச் சென்றவர்களாக கருதப்படுவர் என்றும் அரசாங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

