Home இலங்கை யாழில்.மீண்டும் தலைதூக்கும் வாள் வெட்டுகுழுக்கள். இராண்டு நாளில் நால்வர் படுகாயம்:-

யாழில்.மீண்டும் தலைதூக்கும் வாள் வெட்டுகுழுக்கள். இராண்டு நாளில் நால்வர் படுகாயம்:-

by editortamil

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

யாழில்.இருவேறு இடங்களில் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய பிரதேசங்களில். குறித்த வாள் வெட்டு சம்பவங்கள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்.நகரில் இருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் வைத்து வாளினால் வெட்டியுள்ளனர்.

அதில் கோப்பாய் வடக்கை சேர்ந்த சிறிகாந்தன் என்பவர் படுகாயமடைந்தார். அதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர். இருந்த போதிலும் நேற்று திங்கட்கிழமை இரவு வரையிலும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

அதேவேளை நேற்று திங்கட்கிழமை இரவு நவாலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழுவினர் வீட்டினை அடித்து நொறுக்கி சேதமாக்கியதுடன் , குடும்பத்தலைவர் மீதும் வாளினால் வெட்டினர். அதனை அடுத்து குடும்பத்தலைவர் சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில்.மீண்டும் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.குருநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் இருவர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More