Home இலங்கை தமிழ் ஊடகத்துறைக்கு கோபுவின் மறைவு ஒரு பாரிய இழப்பு – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

தமிழ் ஊடகத்துறைக்கு கோபுவின் மறைவு ஒரு பாரிய இழப்பு – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

by admin
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரட்ணத்தின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பாரிய இழப்பு என தமிழ் ஊடகவியலாளர்  ஒன்றியம்  தெரிவித்துள்ளது.
மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரட்ணத்தின் மறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடகத்துறைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை பல தசாப்தகாலமாக வழங்கிய கோபாலரட்ணம், சமூக அக்கறையுடனும், துணிச்சலுடனும் பணியாற்றிய ஒரு பத்திரிகையாளர்” என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“தமது 23 வயதில் பத்திரிகை  உலகில்  பிரவேசித்த கோபு, கடந்த ஆறு தசாப்த காலமாக ஊடகத்துறைக்கு மகத்தான சேவையைச் செய்திருக்கின்றார். வீரகேசரியில் 1953 இல் முதலில் ஒப்புநோக்காளராகவே அவர் இணைந்தார். அதன் பிறகு அவருக்கு ஆசிரிய பீடத்தில் ஒரே சமயத்தில்அலுவலக நிருபர் வேலையும் துணை ஆசிரியர் பணியும் கிடைத்திருக்கிறது. அதன்பின்னர் ஊடகத்துறைல் தனது அர்ப்பணிப்பான பணியால் உயர்ந்து ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, கிழக்கிலிருந்து வெளியான முதலாவது தினசரியான தினக்கதிரின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியிருக்கின்றார். தேனீ, ஊர்சுற்றி, எஸ். எம்.ஜி.  முதலன பெயர்களில் ஏராளமான கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதியிருக்கும் கோபு, படைப்பிலக்கியத்துறையிலும் கால் பதித்தவர்.
இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்தான காலப்பகுதியில் ஈழமுரசு பத்திரிகை ஆசிரியராக இருந்த போது கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டவர். இதன்போது தனக்குக் கிடைத்த அனுபவத்தை தென்னிந்திய சஞ்சிகை ஒன்றில் தொடராக எழுதி பின்னர் அதனை நூலாகவும் வெளியிட்டவர். கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அர்ப்பணிப்புடனும், துணிச்சலுருடனும் பணியாற்றிய ஒரு பத்திரிகையாளர் கோபு.
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோபுவின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பாரிய இழப்பு. அவரின் மறைவால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.”இவ்வாறு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More