Home உலகம் EUவில் இருந்து பிரிந்து செல்ல, 45-55 பில்லியன் யூரோ – UK இணக்கம் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்

EUவில் இருந்து பிரிந்து செல்ல, 45-55 பில்லியன் யூரோ – UK இணக்கம் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்

by admin


ஐரோப்பிய  ஒன்றியத்தில் இருந்து  பிரிந்து செல்வதற்கு 45-55 பில்லியன் யூரோ வரையில் வழங்குவதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளது. இது குறித்து , அந்த அமைப்புடன் பிரித்தானியா  பிரிவினை உடன்படிக்கை  ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக பிரித்தானியா இருந்த நிலையில், அதில் இருந்து வெளியேறுவது தொடர்பாக, டேவிட் கமரூன் பிரதமராக இருந்த போது பேச்சுக்கள் எழுந்தன.

இது குறித்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம்  திகதி  இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பில்  சுமார் 52 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தமையினால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியானது.

இதற்காக  முதற் கட்டமாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில்    பிரக்சிற்றின் முதல் நடவடிக்கையாக ஐரோப்பிய  ஒன்றிய  உடன்படிக்கை பிரிவு 50-ஐ கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி பிரித்தானியா பிரகடனம் செய்தது.

இதன்படி 2 ஆண்டுகளில், அதாவது 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  பிரித்தானியா வெளியேற வேண்டும்.

இந்த நிலையில் இதற்கான பேச்சுவார்த்தையை பிரி்தானிய பிரதமர் தெரசா மே ஆரம்பித்தனைத் தொடர்ந்து அயர்லாந்துடனான எல்லை விவகாரத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது.

இவற்றின் தொடர்ச்சியாக தெரசா மே, பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் செனறு அங்கு அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன்  பேச்சுவார்தை நடத்தினார். இதனையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிவினை உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ஐரோப்பிய  ஒன்றியம் ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பிரச்சினையில், அயர்லாந்து எல்லை உள்ளிட்ட பல அம்சங்களில் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரிவினை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஐரோப்பிய  ஒன்றியத்தில்  இருந்து பிரிந்து செல்வதற்கு 45-55 பில்லியன் யூரோவை வழங்குவதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய  ஒன்றிய தலைவர் ஜோன் கிளவுட் ஜங்கருடன் பிரசல்ஸ் நகரில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரித்தானிய பிரதமர் தெரசா மே, ‘அயர்லாந்துடனான எல்லையில் கடினமான நிலை (சிக்கல்) இருக்காது என்பதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்தாலும், அங்கு வாழும் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொடர்ந்து அங்கு வசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரக்சிற்றின் அடுத்த கட்ட நடவடிக்கை எதிர்வரும் 14, 15ம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More