Home இலங்கை யாழில். விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு. நீதிமன்றை நாடவும் திட்டம்

யாழில். விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு. நீதிமன்றை நாடவும் திட்டம்

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். நாக விகாரை விகாராதிபதியின் உடலை யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.  அதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.நாக விகாரை விகாராதிபதி ஞானரத்ன தேரர் சுகவீனம் காரணமாக கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.  அவரது உடலம் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பணத்திற்கு கொண்டு வரப்பட்டு நாக விகாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இறுதி கிரியைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அந்நிலையில் முற்றவெளியில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட போது , யாழ்.மாநகர சபை அதற்கான அனுமதியினை வழங்கவில்லை.  அதை அடுத்து , தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி அமைந்துள்ள இடத்திற்கும் , யாழ்.கோட்டை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாகும்.
அப்பகுதியில் உடலை தகனம் செய்வதற்கு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டு அப்பகுதியில் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தொல்லியலை அழிக்கும் செயற்பாடு. 
அதற்கு யாழில்.பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  தொல்பொருள் திணைக்களம் எமது தொல்லியல்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு எமது தொல்லியல்களை அழிக்கும் நடவடிக்கைக்கு துணை போக கூடாது.
தொல்லியல் திணைக்கள காணியில் உடலை தகனம் செய்வதற்கு அனுமதி கொடுக்க யார் அழுத்தம் கொடுத்தார்கள்? யாழில் எத்தனயோ சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகள் உள்ளன அவற்றில் தகனம் செய்யவோ , நல்லடக்கம் செய்யவோ நாம் எந்த எதிர்ப்பையும் கட்டமாட்டோம்.
ஆனால் இந்த பகுதியில் உடலை தகனம் செய்வதற்கு உள்நோக்கம் கொண்ட செயற்பாடு ஆகும். அதனால் அதற்கு நாம் எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றை நாடி தடையுத்தரவு பெற முயற்சி. 
மதகுருவின் உடலை தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் தகனம் செய்வதனை தடை செய்வதற்கு நீதிமன்றை நாடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமையிலும் முனியப்பர் கோவிலுக்கு அருகாமையிலும் இறந்த மத குருவின் உடல் தகனம் செய்யப்படுவதை சட்ட ரீதியாக தடைசெய்ய முயற்சி செய்வேன். தற்போது நீதிமன்றங்கள் விடுமுறையில் இருப்பது எனது முயற்சியை பாதிக்குமோ என அஞ்சுகின்றேன்.என தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு. 
 
அதேவேளை சமூக வலைத்தளங்களிலும் அப்பகுதியில் உடலை தகனம் செய்வதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More