Home இலங்கை கைத்துப்பாக்கியை காட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு – சண்டியர்களாக மாறும் யாழ் காவற்துறை..

கைத்துப்பாக்கியை காட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு – சண்டியர்களாக மாறும் யாழ் காவற்துறை..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிவில் உடை தரித்த தமிழ் மொழி பேசும் காவற்துறையினரால் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி காண்பித்து பறிமுதல் செய்யபட்டு மூன்று மணி நேரத்தத்திற்கு பின்னர் மீள கையளிக்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் யாழ்.ஐந்து சந்தி பகுதியில் கடந்த சனிக்கிழமை மதியம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவிக்கையில் , காரைநகரை சேர்ந்த நானும் எனது நண்பன் ஒருவனும் அன்றைய தினம் யாழ். நகருக்கு வந்து இருந்தோம். அவ்வேளை ஐந்து சந்தி பகுதியில் நண்பன் ஒருவரை கண்டு வீதியோரமாக நின்று நண்பனுடன் கதைத்துக்கொண்டு இருந்தோம்.

அவ்வேளை, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த சிவில் உடை தரித்த இருவர் ,தமிழ் மொழியில் தான் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தை சேர்ந்த காவற்துறையிர் மோட்டார் சைக்கிளை தா என மிரட்டி மோட்டார் சைக்கிளை கேட்டனர்.

அதற்கு நாம் மறுப்பு தெரிவிக்கவே, தமது இடுப்பில் இருந்து கைத்துப்பாக்கியை காண்பித்து மோட்டார் சைக்கிளை தா என மிரட்டி எம்மிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளை காவற்துறை நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறி மோட்டார் சைக்கிளை பறித்து சென்று விட்டனர். அதன் பின்னர் நாம் யாழ்ப்பாண காவற்துறை  நிலையத்திற்கு சென்று மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரித்த போது , அது குறித்து தமக்கு தெரியாது என போலீசார் தெரிவித்தனர்.

அவ்வேளை நாம் அது குறித்து முறைப்பாடு செய்ய போகின்றோம் என கேட்ட போது, காவற்துறையினருக்கு எதிராக காவற்துறை  நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாது. மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றவர்கள் வந்ததும் அதனை பெற்று செல்லுமாறு கூறினார்கள். அது குறித்து முறையிட யாழ்.மாவட்ட பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. அதனை அடுத்து வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகத்திற்கு முறையிட சென்ற போது , அது குறித்து யாழ்.காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம் என கூறி எம்மை அனுப்பி வைத்தனர்.

மீண்டும் நாம் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்திற்கு சென்ற போது எம்மிடம் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் எம்மிடம் மீள மோட்டார் சைக்கிளை ஒப்படைத்தனர். மோட்டார் சைக்கிள் பறித்து சென்றமை தொடர்பில் முறைப்பாடு செய்ய சென்ற போது எமது முறைப்பாட்டை ஏற்க முடியாது என எம்மை திருப்பி அனுப்பினார்கள்.

குறித்த சிவில் உடை தரித்த இரு காவற்துறையினரும் எமது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கொண்டு சென்று சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இருந்தால் எமது மோட்டார் சைக்கிள் இலக்கமே பதிவாகி இருக்கும். அவர்கள் எமது மோட்டர் சைக்கிளை எங்கே கொண்டு சென்று என்ன நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்பது தெரியாததால் நாம் பயத்துடன் காணப்படுவதாக தெரிவித்தனர். அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.காவற்துறை நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது , குறித்த இரு இளைஞர்கள் தொடர்பில் சந்தேகத்தில் விசாரணை செய்தோம். மோட்டார் சைக்கிளை பறிக்க வில்லை என தெரிவித்தார்,

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More