Home இலங்கை தமிழர்களுக்கு என்ன அதிகாரங்களை வழங்குவீர்கள்? ரணிலின் பதில் :

தமிழர்களுக்கு என்ன அதிகாரங்களை வழங்குவீர்கள்? ரணிலின் பதில் :

by admin


இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்று பத்து நாட்கள் கடந்துள்ளன. எனினும் இன்னமும் அரசியலமைப்பின் பிரபாகரன் நானே பிரதமர் என்று கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க. இலங்கையின் பிரதமர் அலுவலத்தில் தொடர்ந்து தங்கியுள்ள நிலையில் தனக்கே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்றும் யார் உண்மையில் பிரதமர் என்பதை பாராளுமன்றமே அதனை தீர்மானிக்கப்பட்டும் என்றும் குறிப்பிடுகிறார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் இது.

கே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதா?

ப. இந்த நடவடிக்கையை அவர் நவம்பர் மாதத்தில்தான் எடுப்பார் என எதிர்பார்த்தோம். இப்போது எடுப்பார் என நினைக்கவில்லை.

கே. 2015 பாராளுமன்றத் தேர்தல்வாக்கிலேயே உங்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தோன்றியதாக சொல்லப்பட்டது. ஜனாதிபதி இம்மாதிரி நடந்துகொள்வார் என எதிர்பார்த்தீர்களா?

ப. நவம்பர் இரண்டாம் வாரத்தில் இப்படி நடக்கலாம் என எதிர்பார்த்தோம். பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் பெரிய கருத்து வேறுபாடுகள் இல்லை. அதற்குப் பிறகு பல விஷயங்களில் ஒப்புதல் இருந்தது. சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.

கே. உங்களை நீக்கிய பிறகு நீங்கள் ஏன், உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை?

ப. இல்லை. இதனை பாராளுமன்றம்தான் முடிவுசெய்ய வேண்டும். பிரதமர் என்பவர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றவர். இலங்கையில் இதனை பாராளுமன்றம்தான் முடிவுசெய்யும். பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தை நாங்கள் நம்புகிறோம். இதில் அரசியல்சாஸனம் மிகத் தெளிவாக இருக்கிறது. யாரிடம் பெரும்பான்மை இருக்கிறதோ, அவரே பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றவர்.


கே. பிரதமரை நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக ஜனாதிபதி சொல்கிறார்..

ப. நாங்கள் அதை ஏற்கவில்லை. பாராளுமன்றம்தான் அதை முடிவுசெய்யும். பெரும்பான்மை இருப்பதாக ஒருவர் சொன்னால் அதை அவர் நிரூபித்தாக வேண்டும். அதுதான் பாராளுமன்ற ஜனநாயகம்.

கே. முன்னதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யவையும் உங்கள் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் பிரதமராக்க முயன்றதாகவும் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். அவர்கள் இது குறித்து உங்களிடம் சொன்னார்களா?

ப. மறைமுகமாகச் சொன்னார்கள்.

கே. நீங்கள் மேலை நாடுகளுக்கு ஆதரவான நபர் என்றும் வெளி சக்திகளுக்கு ஏற்ற வகையில் செயல்படுபவர் என்றும் உங்களைச் சித்தரிக்கிறார் ஜனாதிபதி..

ப. இலங்கை நிலவரத்திற்கு ஏற்றபடிதான் நான் செயல்படுகிறேன். ஆனால், மேலை நாடுகள், இந்தியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் நல்லுறவை பேணுகிறோம். எங்களுக்கு எதிரிகள் இல்லை.

கே. உங்களுடைய மூன்றாண்டுகால ஆட்சியில் முக்கியமான முடிவுகள் உங்களைச் சுற்றியிருந்தவர்களால் எடுக்கப்பட்டன என்றும் அமைச்சரவை முடிவெடுக்கவில்லையென்றும் ஜனாதிபதி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ப. இல்லை. எல்லா முடிவுகளுமே ஜனாதிபதியாலோ, அமைச்சரவையாலோ என்னாலோதான் எடுக்கப்பட்டன. என்னைச் சுற்றியிருந்தவர்கள் முடிவெடுக்க முடியாது. அமைச்சர்கள் முடிவெடுத்தார்கள். அல்லது கபினட் குழுக்கள் முடிவெடுத்தன. அல்லது ஜனாதிபதி முடிவெடுத்தார். நானாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.

கே. மஹிந்த பாராளுமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் என்ன நடக்கும்?

ப. பெரும்பான்மை கொண்டிருப்பவரைத் கண்டறிய வேண்டும். எங்களிடம்தான் பெரும்பான்மை இருக்கிறது. சபாநாயகரின் உத்தரவு மிகத் தெளிவானது. எதிர் தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் இல்லாவிட்டால் எங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகத்தான் அர்த்தம்.

கே. தமிழ் அரசியல் கைதிகளை 2015க்குப் பிறகு விடுவிக்க மைத்திரிபால சிறிசேன மறுத்ததாக மங்கள சமரவீர கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கிறீர்களா?

ப. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உள்ளே இருக்கின்றனர். யாரையெல்லாம் விடுதலை செய்வது என்பது குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இது குறித்து ஜனாதிபதி என்ன நினைத்தார் என எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் இது குறித்து விவாதிக்கவில்லை.

கைதிகள் குறித்து தொடர்ந்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். சிலர் 15 – 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அம்மாதிரியானவர்கள் குறித்த வழக்குகளை பச்சாதாபத்துடன் அணுகுகிறோம்.

கே. ஜனாதிபதியை கொல்ல முயற்சி நடந்ததாக அவர் கூறியதாக கூறப்பட்டது. அதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ப. காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஜனாதிபதிக்கு தெரிவிக்கும்படி காவல்துறையிடம் சொல்லியிருக்கிறேன்.

கே. இலங்கையின் தற்போதைய மோசமான பொருளாதார நிலைமைக்கு நீங்களே காரணமென்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

ப. சர்வதேச நிதியம் மற்றும் பல அறிக்கைகளைப் பார்த்தால் நாடு பொருளாதார ரீதியில் சிறப்பாக செயல்படுவது தெரியும். நாடு முன்னேறியிருக்கிறது. பொருளாதாரம் ஸ்திரமடைந்திருக்கிறது. கடன்கள் திரும்பச் செலுத்தப்பட்டுவருகின்றன. விலைவாசி உயர்வு ஒரு பிரச்சனைதான். ஆனால், உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. இந்தியாவில் இந்தப் பிரச்சனை இருக்கிறது. இந்தோனேசியாவில் இருக்கிறது. டாலர் மதிப்பு உயர்வதும் பெட்ரோலியத்தின் விலை உயர்வதும் இதற்குக் காரணம். உலகின் பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

கே. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த சந்தர்ப்பத்திலாவது ஜனாதிபதி உஹ்களோடு ஒத்துழைக்க மறுத்திருக்கிறாரா?

ப. பல விஷயங்களில் அவருக்கென கருத்துகள் உண்டு. அதைப் பற்றி விவாதித்து, தீர்த்திருக்கிறோம். எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போகவில்லையென்பது உண்மைதான். ஆனால், பெரிதாக எந்த சர்ச்சையுமில்லை.

கே. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நீங்களும் மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றாக இணைந்தீர்கள். அதன் பிறகு என்ன நடந்தது? பிளவு எப்படி ஏற்பட்டது?

ப. அவரோடு எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கடந்த மாதத்திலிருந்து அவர்தான் என்னைப் பற்றி புகார்கூற ஆரம்பித்தார்.

கே. ஆனால், எட்டு மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் உங்களுக்குப் பதிலாக ஆட்களைத் தேடிவந்தார்..

ப. அவர் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் நான் வெற்றிபெற்றேன். பிரதமருக்கு எதிராக தான் சதி செய்வதை நாட்டுக்குத் தெரிவிக்க இதையெல்லாம் அவர் செய்தாரோ என்னவோ..

கே. வடக்கையும் கிழக்கையும் இணைக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென ஜனாதிபதி கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் ஆதரவுடன்தான் மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர முடியுமென்றால் என்ன செய்வீர்கள்?

ப. வடக்கு – கிழக்கு இணைப்பைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர பிற கட்சிகள் எதுவும் அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை. மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதைப் பற்றிக் கேட்க வேண்டுமென்றால், அதற்கு சரியான நபர் எதிர்க்கட்சித் தலைவர்தான். அவர்தான் ஜனாதிபதியோடு இது தொடர்பாக நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறார். மாகாண கவுன்சில்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டுமென அவரது கட்சி கோரியிருக்கிறது.

கே. காவல் மற்றும் நில அதிகாரங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதா?

ப. வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு விதமான ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள். இம்மாதிரியான ஒரு வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனையை பெற வேண்டும்.

கே. காவல் மற்றும் நில அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளிக்கும் யோசனை உங்களுக்கு ஏற்புடையதா?

ப. காவல் மற்றும் நில அதிகாரங்களை விடுங்கள்.. கூடுதலாக என்ன அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளிக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். சில அதிகாரங்களை அளிக்க முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

கே. காவல்துறை அதிகாரத்தையுமா?

ப. பல கட்சிகள் இருக்கின்றன. யாரும் ஒரு உடன்பாட்டுக்கு வர மறுக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி உள்பட பல கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை அரசியல் சாஸன அவையின் வழிநடத்தும் குழுவிடம் அளித்துள்ளன. பார்க்கலாம்.

கே. தற்போதைய குழப்பத்திற்கு நடுவில், புதிய அரசியல்சாஸனத்தை உருவாக்கும் முயற்சிகள் என்னவாகும்?

ப. எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். தற்போது எல்லாமே நின்றுபோயிருக்கிறது. இந்தச் சிக்கலைத்தான் முதலில் தீர்க்க வேண்டும்.

நேர்காணல் -பிபிசி தமிழ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More