Home இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டை பிரதமர் மீது ரவி கருணாநாயக்க திருப்புகின்றாரா?

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டை பிரதமர் மீது ரவி கருணாநாயக்க திருப்புகின்றாரா?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது திருப்பும் வகையிலான கருத்துக்களை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் தாற்பரியம் புரியவில்லை என ரவி கருணாநாயக்க ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் மத்திய வங்கியோ அல்லது அரச வங்கிகளோ தமது அமைச்சின் கீழ் இயங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த நிலையில் தமக்கு எதிராக எவ்வாறு குற்றம் சுமத்தப்படுகின்றது என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசியலில் தாம் 25 ஆண்டுகளாக இருப்பதாகவும் தமது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பலர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமக்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர் இந்த விடயம் குறித்து விரிவாக தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடி சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் காலத்தில் மத்திய வங்கியோ அரச வங்கிகளோ தமது அமைச்சின் கீழ் இயங்கவில்லை என்று கூறுவதன் மூலம் அவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இயங்கின என மறைமுகமாக ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More