இந்தஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருக்கு ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆடவர் பிரிவில் 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று, தனது சொந்த சாதனைகளை தொடர்ந்து முறியடிக்கும் ஒரே வீரராக ரோஜர் பெடரர் திகழ்கின்றார்.

இந்தநிலையில் அடுத்த வாரம் நெதர்லாந்தில் நடைபெற உள்ள ரொட்டர்டாம் (Rotterdam) போட்டியில் பெடரர் பங்கேற்க உள்ளார். இந்தப் போட்டியில் அரை இறுதியில் நுழைந்தாலேயே, உலகின் முதல்தர வீரர் என்ற பெருமையை பெடரர் பெறுவார். தற்போது முதலாம் இடத்தில் உள்ள ரபேல் நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை என்பதனால் பெடரருக்கு முதலாம் இடத்தினை பெறுவதற்கான வாய்ப்புகள் பலமாக உள்ளன.
அதேவேளை 36 வயதாகும் பெடரர் முதலாம் இடத்தினைப் பெற்றால் மிகவும் அதிக வயதில் இடத்தைப் பிடித்த வீரர் என்ற சாதனையையும் பெறுவார். இதன்மூலம் ஆந்தரே அகாசி 33 வயதில் புரிந்த சாதனையை பெடரர் முறியடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது


