Home இலங்கை வடக்கில் தமிழரசுக்கட்சிக்கு பலப் பரீட்சை! தெற்கில் மும்முனைப் போட்டி!

வடக்கில் தமிழரசுக்கட்சிக்கு பலப் பரீட்சை! தெற்கில் மும்முனைப் போட்டி!

by admin


இலங்கையில் இன்று நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தல் வெறுமனே உள்ளுராட்சித் தேர்தலாக மாத்திரமின்றி பிரதான கட்சிகளின் பலம் அறியும் பலப் பரீட்சையாகவும் அமைகின்றது. குறிப்பாக, தென்னிலங்கை, வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் பிரதான பகுதிகளின் அரசியல் பலம் அறியும் தேர்தலாக இந்தத் தேர்தல் கருதப்படுகின்றது.

தெற்கு

தென்னிலங்கையைப் பொறுத்தவரையில்   உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது மும்முனை போட்டி களமாக  காணப்படுகின்றது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி,  முன்னாள்  ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான  சிறிலங்கா பொதுஜன பெரமுன  ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே பலப் பரீட்சை இடம்பெறுகின்றது.

வடக்கு

வடக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்காக பல்வேறு கட்சிகள் தேர்தலில் குதித்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  தமிழ் தேசிய மக்கள் முன்னணி,  தமிழர் விடுதலை கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும்  சுயேச்சைக்குழுக்கள்  வடக்குத் தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ளன. வடக்கு கிழக்கின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் பெயரில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏனைய கட்சிகளுக்குமிடையில் பாரிய  போட்டி நிலவியதுடன்  இன்று பலப்பரீட்சை இடம்பெறவுள்ளது.

கிழக்கு

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போட்டியிடுகின்றது.  இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்   அம்பாறை மாவட்டத்தில்  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அத்துடன்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது அம்பாறையில்  தனித்து போட்டியிடுகின்றது. அத்துடன் மேலும்   சிறிலங்கா சுதந்திரக்கட்சி,  சிறிலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளும்  சுயேச்சைக்குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

மலையகம்

இம்முறை மலையகத் தேர்தல் களமும் கடுமையாக சூடுபிடித்திருக்கின்றது. ஒருமித்த முற்போக்கு கூட்டணி  மலையகத்தில்  சில இடங்களில் தனித்தும் சில இடங்களில்  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும்  போட்டியிடுகின்றது. நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை  மாவட்டங்களில் முற்போக்கு கூட்டணி கூட்டடாகவும் தனித்தும் போட்டியிடுகின்றது.

மலையகத்தில் இம்முறை  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  நுவரெலியா மாவட்டத்தில்   சுதந்திரக்கட்சியுடன் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதேபோன்று ஏனைய  மாவட்டங்களான பதுளை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில்  ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியின் சின்னத்தில் இ.தொ.கா. போட்டியிடுகின்றது.

கொழும்பு

கொழும்பு மாவட்டத்திலும் இம்முறை அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. கொழும்பு மாவட்டத்தில்  ஒருமித்த முற்போக்கு கூட்டணி  தனித்து போட்டியிடுகின்றது. அதேபோன்று ஜனநாயக மக்கள் காங்கிரஸும்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றது. மேலும்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி,  மற்றும் சுயேச்சைக் குழுக்களும் கொழும்பில் போட்டியிடுகின்றன.

அந்தவகையில்  இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மிகவும்  முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது. இம்முறை உள்ளூராட்சி தேர்தலானது   வட்டாரம் மற்றும் விகிதாசார முறைமை  என்ற  கலப்பு முறைமையில் நடைபெறுகின்றது. 60 வீதம்  வட்டாரமுறைமையிலும்  40 வீதம் விகிதாசார முறைமையிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.  மக்கள்  நேரகாலத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இன்றுகாலை 7 மணிமுதல்  மாலை 4 மணிவரை   தேர்தல் வாக்கெடுப்பு  நடைபெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More