Home இலங்கை புளொட் முன்னாள் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்திடமிருந்து காணாமற்போனவையாம்

புளொட் முன்னாள் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்திடமிருந்து காணாமற்போனவையாம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

‘புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை எனவும் அவை காணாமற்போயிருந்தன எனவும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது’ என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட் அமைப்பின் அலுவலகம் இருந்தது அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரிவித்து வந்தார்.

அந்நிலையில் வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் காவல்துறையினர் சென்றனர். அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்ட போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டன.

பயன்படுத்தத்தக்க ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கட்டளையில் இன்றுவரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் சந்தேகநபர் இன்று (26) திட்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

‘சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் இராணுவத் தலைமையகத்திடம் விளக்கம் கோரப்பட்டது. அதற்கான விளக்கத்தை இராணுவத் தலைமையகம் வழங்கியுள்ளது. 1998ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4ஆம் திகதி இராணுவத்தின் காலாற்படைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் காணாமற்போயிருந்தன. அந்த ஆயுதங்களே தற்போது மீட்கப்பட்டுள்ளன. அவை சந்தேகநபர் வசம் சென்றமை தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது’ என இராணுவத் தலைமையகம் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதியுடன், காவல்துறையினர் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதனை வழக்கேட்டில் இணைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபரின் விளக்கமறியலை வரும் 12ஆம் திகதிவரை நீடித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More