Home இலங்கை சங்கானை குருக்கள் படுகொலை . இராணுவ கோப்பிரல் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை…

சங்கானை குருக்கள் படுகொலை . இராணுவ கோப்பிரல் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

சங்கானையில் இந்துமத குருக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த இராணுவ கோப்பிரல் உள்ளிட்ட மூவரையும் யாழ்.மேல் நீதிமன்று இன்று குற்றவாளியாக கண்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே , நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் குற்றவாளியாக அறிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிடப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணிம் சிவரூபன் மற்றும் இராணுவச் சிப்பாய் பேதுறு குணசேன ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின்னர் வழக்கேடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கி சூடு நடத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் குற்றவாளியாக கண்ட நீதிபதி , மூவருக்கும் மரண தண்டனை விதித்ததுடன் , தலா மூவருக்கும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்ற சாட்டுக்கு மூன்று மாத கடூழியி சிறைத்தண்டனையும் , தனியங்கி துப்பாக்கியை பயன்படுத்தி ஆயுத கொள்ளையில் ஈடுபட்ட குற்ற சாட்டுக்கு , ஆயுள் தண்டனையும் , 10 ஆயிரம் ரூபாய் தண்டபணமும் , அதனை கட்டத்தவறின் 06 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் , இருவரை துப்பாக்கியால் சுட்டு படுகாயம் ஏற்படுத்திய குற்றசாட்டுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் , 20 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் அதை கட்ட தவறின் 06 மாத கடூழிய சிறை தண்டனையும் , படுகாயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடா 2 இலட்ச ரூபாய் வழங்க வேண்டும். அதனை வழங்க தவறின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More