Home இலங்கை பௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்குமான கடமைகளை, தாமதமின்றி நிறைவேற்றுவேன்….

பௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்குமான கடமைகளை, தாமதமின்றி நிறைவேற்றுவேன்….

by admin

பௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் மகா சங்கத்தினரின் ஆசிகளுடன் தாமதமின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்காக பல செயற்திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்திலும் அச்செயற்திட்டங்களை வலுவோடு முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி  தெரிவித்தார்.

ராமஞ்ஞ மகா நிக்காயவின் அனுநாயக்கர் பதவியளிக்கப்பட்டுள்ள சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ வித்யா விபூஷன, ராஜகீய பண்டித வண. மாத்தளே ஸ்ரீ தம்மகுசல அனுநாயக்க தேரருக்கு அப்பதவிக்கான நியமனப் பத்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றதுடன், இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

வண. மாத்தளே ஸ்ரீ தம்மகுசல அனுநாயக்க தேரர், பௌத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றி வரும் செயற்பணிகளை பாராட்டும் வகையிலேயே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புண்ணிய நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி , சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு சமய கோட்பாடுகளுக்கமைய நிறைவேற்ற வேண்டிய செயற்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார்.

சமயக் கோட்பாடுகளையும் விழுமியப் பண்புகளையும் தவறாது பின்பற்றி வரும் ஒழுக்க சீலரான வண. மாத்தளே ஸ்ரீ தம்மகுசல அனுநாயக்க தேரர், பௌத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றி வரும் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, அன்னாரின் வாழ்க்கை வரலாறு இளம் பிக்குமாருக்கும் சமூகத்திற்கும் சிறந்த முன்னுதாரணமாகுமெனக் குறிப்பிட்டார்.

றுகுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் வண. தல்தென அரிய விமல தேரரினால் தொகுக்கப்பட்ட குசுமாஞ்சலி பௌத்த சஞ்சிகையும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிக்காயவின் மகா நாயக்கர் அதிவண. நாபான பிரேமசிறி நாயக்க தேரர், மல்வத்து பிரிவின் அனுநாயக்கர் வண. திம்புல்கும்புரே ஸ்ரீ விமல தம்ம அனுநாயக்க தேரர், ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்கர் வண. கொட்டுகொட தம்மாவாச மகா நாயக்க தேரர், மகா சங்கத்தினர், சபாநாயகர் கரு ஜயசூரிய, மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More