Home இலங்கை நிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்….

நிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன் –

இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீவுகளில் ஒன்றே இரணைத்தீவு. யாழ்ப்பாணம் பூநகரி மன்னார் வீதியான ஏ 32 பிரதான வீதியில் முழங்காவில் பகுதியிலிருந்து மேற்கு பக்கமாக சென்று அங்கிருந்து படகுகளில் இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும்.

1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இரணைத்தீவில் வாழ்ந்த சுமார் 200 மேற்பட்ட குடும்பங்கள் அந்த தீவிலிருந்து வெளியேறி பூநகரி பெரும் நிலப்பரப்பில் வந்து குடியேறினார்கள். இவர்களை அப்போது இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேற்றப்பட்டனர். அன்று முதல் கடந்த 15 ஆம் திகதி வரை இந்த மக்கள் இரணைமாதாநகரிலேயே வாழ்ந்து வந்தனர்.

இரணைத்தீவு எனும் அந்தக் சிறிய தீவு 1992 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற தீவு. 2009 க்கு முன் யுத்தகாலத்தில் இந்த தீவுக்கு அருகில் சென்று கடற்றொழில் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவி வந்தது. யுத்ததிற்கு பின்னர் வருடத்தில் ஒரு நாள் அங்குள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ள மட்டும் கடற்படையினர் அனுமதித்திருந்தனர்.

இதனால் இவர்களின் பொருளாதாரம் மேம்பாட்டையவில்லை. தங்களின் சொந்த நிலமான இரணைத்தீவு கடற்றொழிலுக்கு சிறப்பான இடமாக விளங்கியமையினால் அங்கு வாழ்ந்த 1992 முற்பட்ட காலத்தில் தன்னிறைவான பொருளாதாரத்தை கொண்ட மக்கள் செழிப்பாக வாழ்ந்தனர். ஆனால் இரணைமாதாநகரில் இவர்களுக்கு அந்த செழிப்பான பொருளாதார நிலைமை இல்லாத காரணத்தினாலும் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பில் பிரச்சினையில்லை என்ற காரணத்தினாலும் இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் நிலைப்பாட்டிற்கு வருகின்றனர். இதன் விளைவாக கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி இரணைமாதாநகர் தேவாலயம் முன்றலில் இரணைமாதாநகர் மக்கள் தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

போராட்டம் நூறு இருநூறு நாட்களை கடந்து சென்றுக்கொண்டிருந்தது. தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லைஇ அரசியல்வாதிகள் சென்று பார்வையிட்டனர் வாக்குறுதிகளை வழங்கினார்கள் அமைச்சர்கள் சென்றார்கள் பார்த்தார்கள் அவர்களும் வாக்குறுதிகள் வழங்கினார் ஆனால் எதுவும் நடக்கவில்லை நாட்கள் மட்டும் முன்னூறை கடந்தது. தங்களின் பூர்வீக நிலத்திற்குச் செல்ல வேண்டும் என்று போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் பொறுமையிழந்தனர். தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் அங்கு 1992 க்கு முன் வாழ்ந்த செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கம் வலிமைபெறத்தொடங்கியது. இரணைமாதாநகரில் வாழ்வாதாரத்தை இழந்து பெருமளவுக்கு வறுமையில் காலத்தை கழித்த மக்களுக்கு இரணைத்தீவுக்கு சென்று குடியேற வேண்டும் அவா அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி தங்களது போராட்டத்தின் 359 வது நாளில் இரணைமாதாநகரில் தாங்கள் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு இரணைத்தீவு நோக்கி அருட்தந்தையர்களுடன் மீன்பிடி படகுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் இரணைத்தீவு நோக்கிச் சென்று அங்கு தங்கிவிட்டனர்.

இதன் பின்னர் இரணைத்தீவு மக்களின் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுகிறது. தங்களின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நல்லாட்சி அரசில் நம்பிக்கையிழந்து,தாங்களாகவே தங்களின் சொந்த நிலத்தில் சென்று குடியேறிய செய்தி ஊடகங்கள் மூலம் காட்டுத்தீ போன்று பரவுகிறது. எனவே மீண்டும் முன்னாள் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள வடக்கு மாகாண முதலமைச்சர் என அரசியல்வாதிகள் மீன்பிடி படகுகளில் சுமார் ஒரு மணித்தியாலயம் பயணம் செய்து இரணைத்தீவில் குடியேறிய மக்களை சந்திக்கின்றனர். இதன் பின்னரே கடந்த 15 ஆம் திகதி இரணைத்தீவுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, இலங்கை கடற்படை தளபதி ரியர்அட்மிரல் எஸ்எஸ். ரணசிங்க கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் இரணைத்தீவுக்குச் சென்று குடியேறிய மக்களை சந்தித்து உத்தியோகபூர்வமாக இரணைத்தீவில் குடியேறலாம் என அறிவிக்கின்றனர். எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் கடற்படையினர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இருப்பார்கள் என்றும் அது அரச காணி என்றும் ஏனைய பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட 190 குடும்பங்களுக்கு அவர்களின் காணிகள் வழங்க்கப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் அறிவித்துள்ளது.

தற்போது இரணைத்தீவு மக்களின் மிக முக்கிய தேவையாக பூர்த்தி செய்ய வேண்டியது அவர்களுக்கான நிரந்தர போக்குவரத்துக்கான படக்கு சேவை, தற்போது தனியாருக்குச் சொந்தமான படகுகளிலேயே பயணம் செய்கின்றனர். எனவே போக்குவரத்து மிக முக்கியமானது. இதனைத்தவிர ஆரம்பசுகாதார நிலையம் மிக மிக அவசியமானது, குடிநீர் வசதி, மின்சார வசதி என்பன மிக அவசியத் தேவைகளாக காணப்படுகின்றன.

1992 இரணைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஆதாவது 26 வருடங்களுக்கு பின்னர் குடியேறும் அனுமதி கிடைக்கிறது. இது இரணைத்தீவு மக்களின் தன்னெழுச்சியான போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அந்த மக்கள் இன்று நிலம் மீட்ட போராளிகளாக காணப்படுகின்றனர்.

நிலம் விடுவிக்கப்பட்ட செய்தி கிடைத்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர். தாங்கள் தங்களின் சொந்த நிலத்தில் இறப்பதற்கு முன் சென்று குடியேறவேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளதாக இரணைத்தீவின் மூத்த குடிகள் கண்ணீருடன் சொன்னார்கள்.

1992 க்கு முன் வாழ்ந்த வளமான வாழ்க்கையை மீண்டும் வாழும் நிலைமை ஏற்படுமா என்று காத்திருந்த எங்களுக்கு அதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளது என்றும் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என யேசு கிறிஸ்த்து கூறியது போன்று தட்டினோம் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன என்றும் சொன்னார் மற்றொரு இரணைத்தீவின் கடற்றொழிலாளி ஒருவர்.

இரணைத்தீவு மக்களின் வாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது, இனி நாங்கள் எங்களது சொந்த காலில் நிற்போம், நம்பிக்கையுடன் சொன்னார் யுத்தத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர். எனவே இப்போது இரணைமாதாநகர் மக்கள் மீண்டும் இரணைத்தீவு மக்களாகிவிட்டனர்.

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன் –

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More