Home இலங்கை மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புத்துண்டுகள் மீட்பு -நாளை மீண்டும் தொடரும்-(வீடியோ இணைப்பு)

மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புத்துண்டுகள் மீட்பு -நாளை மீண்டும் தொடரும்-(வீடியோ இணைப்பு)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (29) இரண்டாவது நாளாக மனித எலும்புகள் மீட்கும் பணிகள் சற்று முன் நிறைவடைந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில் இரவு 7 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளது.

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும்,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகள் ஆரம்பமானது. எனினும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் காலை முதல் இரவு வரை முழுமையான அகழ்வுகள் இடம் பெற்றது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், திருமதி ரணித்தா ஞானராஜ் , விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மன்னார் நகரசபை,நில அளவைத்திணைக்களம்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள்,தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது நில மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் விசேட குழுவினர் தமது அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் பல்வேறு எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதோடு,பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பொலித்தீன் பையில் அதன் உற்பத்தி திகதி கண்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ச்சியாக பல்வேறு மனித எலும்புத்துண்டுகள்,பற்கள் என மீட்கப்பட்டுள்ளது. இரவு 7 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை புதன் கிழமை(30) காலை குறித்த இரு இடங்களிலும் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெறவுள்ளது.குறித்த இரு இடங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More