Home இலங்கை “புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” காணொளி இணைப்பு…

“புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” காணொளி இணைப்பு…

by admin

“இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்” என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஐனாதிபதியின் மக்கள் சேவையின் எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

“அண்மையில் யாழில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தனது கட்சியை வளர்கின்றார். எங்களுடைய மக்களை அவர் காப்பற்றவில்லை.” “நாங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம் .ஏ.சுமந்திரன்,ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

“நாங்கள் உயிருடன் வாழவேண்டுமானால் – நாங்கள் நிம்மதியுடன் வீதிகளில் நடக்கவேண்டுமானால் – எங்களுடைய பிள்ளைகள் பாடசாலை சென்று மீண்டும் வீடு திரும்பவேண்டுமானால்  வடக்கு  – கிழக்கில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும்”  என திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘ஐனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பண ஆகியோர் கலந்துகொண்டனர்.  அவர்கள் முன்னிலையிலே இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.  மேலும் தெரிவிகையில்,
30 வருடங்களாக நாம் போருக்கு முகம் கொடுத்துள்ளோம். கடந்த 3 வருடங்களாக அபிவிருத்தியைச் செய்தார்கள். வேலை வாய்ப்புக்கைளை வழங்கினார்கள். எங்களுடைய காணிகளை விடுவித்ததற்காக இந்த அரசுக்கு நான் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
எமது இளையோர்கள் தமது வேலைவாய்ப்புக்காக வீதிகளில் தடுமாறுகின்றார்கள். வேலைவாய்ப்புக் கிடைக்காததால்தான் இளைஞர்கள் மதுபோதைக்கு ஆளாகின்றார்கள்.
மதுபோதையைக் கொண்டு வந்தவர்கள் யார்? 2009 மே 18இற்குப் பின்னர் போரை முடிவுக்கொண்டு வந்த அரசு, அரசியல்வாதிகளின் ஊடாக – அவர்களுடைய வாகனங்களிலே போதைப்பொருள்களை வடக்கு – கிழக்கு அனுப்பினார்கள்.
போதைப்பொருளின் ஆதிக்கம் இன்று வடக்கு – கிழக்கிலே தலைதூக்குகின்றது. இதற்கு அப்பால் நாம் எப்படி அரசியல் பேச முடியும்.
போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தைக் கொடுத்ததா? அல்லது படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதா? ஒன்றுமே செய்யப்படவில்லை.
ஆனால் எங்களுடைய சமூகதத்தில் முன்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்களும் இல்லை – யாரிடமும் கையேந்திய வரலாறும் இல்லை. எங்களுடைய கைகளிலே நாம் வாழ்ந்தோம்.
12 ஆயிரம் முன்னாள் போராளிகள். இவர்களுக்கு எங்களுடைய ஜனாதிபதி என்ன செய்திருக்கின்றார். அரசால் வழங்கப்படுகின்ற நிதியை நிராகரித்திருக்கின்றார். தெற்கில் தான் வெல்வதற்காக எமது முன்னாள் போராளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
அவர்கள் மனிதர்களில்லையா? ஆயுதத்தை ஏந்தியதால் அவர்கள் மனிதர்கள் இல்லை என்று நீங்கள் நிராகரிக்கின்றீர்களா?  நாங்கள் தலையால் நடந்து ஒற்றுமையுடன் வாக்களித்து அவரை ஜனாதிபதியாக ஆக்கினோம். ஆனால் அவருக்கு எதிராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை எமக்கு எதிராக அவர் அமைச்சர்களாக நியமித்துள்ளார். அதனைத்தான் அவர் வடக்கு மக்களுக்கு செய்துள்ளார் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More