Home இலங்கை“உதவிகள் வேண்டாம் – கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டு இருப்போம் – எங்களுக்கு பிள்ளைகள் வேண்டும்”

“உதவிகள் வேண்டாம் – கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டு இருப்போம் – எங்களுக்கு பிள்ளைகள் வேண்டும்”

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

உழைப்பது 100 ரூபாய் என்றாலும் கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டு இருப்போம் உங்களுடைய எந்தவொரு உதவிகளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும். என தாய் ஒருவர் கண்ணீர்மல்க கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வு நேற்று சனிக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி அமர்விலேயே குறித்த தாய் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அந்த தாய் மேலும் கூறுகையில்,

என்னுடைய ஒரு மகனை சுட்டு படுகொலை செய்து விட்டார்கள். மற்ற மகனை பிடித்து சென்று விட்டார்கள். என்னுடைய பிள்ளையை தேடி நாய் மாதிரி எல்லோருக்கும் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறோம்.

பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. அந்த எல்லையை நாங்கள் தாண்டி விட்டோம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்றாலும் உழைத்து கஞ்சியோ, கூழோ சாப்பிடுவதற்கு எங்களால் முடியும்.

உங்களுடைய எந்த உதவிகளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் வேண்டும். மரியாதை இழந்து வீதி வீதியாக நின்று எங்கள் பிள்ளைகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு முடிவு வேண்டும். இந்த அரசாங்கம் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அந்தளவுக்கு எங்கள் நிலமை உள்ளது. எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் வேண்டும் என்றார்.

மற்றும் ஒரு தாய் கூறுகையில்,

அழுவதற்கு கண்ணீர் இல்லை. சத்தமிடுகிறீர்கள். குழப்புகிறீர்கள், என்றெல்லாம் கூறுகிறீர்கள். உங்களுடைய பிள்ளை காணாமல்போனால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? காலத்திற்கு காலம் விசாரணை என வருகிறீர்கள். நீங்கள் மனிதர்கள் தானா? என்னுடைய பிள்ளை 2007ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து கடத்தப்பட்டான்.

தனிமையில் வாழ்கிறேன். ஆறுதலுக்கும் கூட ஒருவர் இல்லை. இன்னும் எத்தனை வருடங்கள் எங்களை இப்படி அழ வைப்பீர்கள்? எங்கள் பிள்ளைகளின் தகவல்களை வெளிப்படுத்துங்கள் என கூறினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More