Home இலங்கை வட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்?

வட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

சுழிபுரம் – திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைக்  காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை  6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

சடலங்களைப் புதைக்கும் புதைகுழிகள் அமைந்துள்ள இடத்தில் மணல் அகழப்பட்டமையால் எலும்புக் கூடுகள் வெளியே வந்துள்ளன. எலும்புக் கூடுகளின் எச்சங்களுடன் சேர்த்தே மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது எனவும் மக்கள் தெரிவித்தனர்.

திருவடிநிலை புனித கடற்கரையோரத்தில் உள்ள இந்து மயானத்திற்கு சமீபமாக சடலங்களைப் புதைக்கும் இடத்தில் நேற்றுக் காலை முதல் இரு டிப்பர்களில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. இதை அறிந்த வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் து.சுஜிந்தன் உடனடியாக வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த.நடனேந்திரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இவ்விடயத்தை பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு தவிசாளர் கூறினார் என சுஜிந்தன் தெரிவித்தார்.

எனினும், குறித்த டிப்பர் வாகனங்கள் தொடர்ந்தும் மணல் அகழ்ந்து சென்றதை அவதானித்த காட்டுப்புலம் – பாண்டவெட்டை இளைஞர்கள் மாலை 6.00 மணியளவில் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று ஒரு டிப்பரையும் ஒரு ஜே.சி.பி வாகனத்தையும் மடக்கிப் பிடித்தனர்.

இது தொடர்பாக அறிந்த வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ந.பொன்ராசா, செ.கிருஸ்ணராசா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். இந்த விடயம் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு மீண்டும் தெரியப்படுத்தப்பட்டது. அவர் வட்டுக்கோட்டைக் காவற்துறையினருக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சாரதிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்களையும் வாகனங்களையும் காவற்துறை நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

இரு சாரதிகளும் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் எனவும் வாகனங்களும் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

 கடந்த காலங்களிலும் இவர்கள் இந்த இடத்தில் மணல் அகழ்ந்தனர். அப்போது நாம் பிடித்து வட்டுக்கோட்டைக் காவற்துறையிடம் ஒப்படைத்தோம். காவற்துறையினர்  அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவில்லை. டிப்பரையும் சாரதிகளையும் விடுவித்தனர். இந்தத் தடவையும் அவர்கள் உரியவாறு செயற்படுவார்களா என எமக்குச் சந்தேகமாக உள்ளது’ என வாகனங்களை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More