Home இலங்கை 1998-2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மணியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு!

1998-2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மணியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு!

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியை அண்மித்த, கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.  செம்மணிப் பகுதியில் நீர்தாங்கி ஒன்றை அமைக்கும் நோக்கில் பெக்கோ இயந்திரம் மூலம் நிலத்தை அகழ்ந்த போதே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில் கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான நிலக்கீழ் நீர் தாங்கி நிர்மானிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தகாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாரிய அளவில் நடைபெற்றுவரும் இப் பணிகளின் போது நேற்று இயந்திர வலு கொண்டு நிலக்கீழ் தாங்கியினை சுற்றி அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் போது அங்கு கூமார் 3 அடி மண்ணை அகழ்ந்த போது அதற்குள் மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இனங்காணப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் தகவல் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான பொருளியலாலருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர் யாழ். காவல்  நிலையத்தின் உத்தியோகஸ்தர்களையும் அழைத்திருந்தார்.

அங்கு சென்ற  காவற்துறையினரும், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினைச் சேர்ந்தவர்களும் மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர். ஆராய்ந்த பின்னர் இது தொடர்பில் அப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னரே குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

1998 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளின் எலும்புக்கூடுகள் செம்மணியில் மீட்கப்பட்டது. செம்மணியின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் மூலம் பதினைந்து பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமியின் மரணத்துடன் செம்மணிப் படுகொலை அம்பலமானது. கிருசாந்தி, கொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்சவின் ஒப்புதல் வாக்குமூலத்தில் செம்மணிப்படுகொலை முற்று முழுதாக அன்று வெளிச்சமானது.

இதேவேளை தற்போது மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் யாழ் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுடன் எலும்புக்கூடுகளை மீட்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அங்கு மேலும் மனிதப் படுகொலை எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரியாலை, கொழும்புத்துறை, குருநகர் முதலிய பகுதிகளில் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டதாக வழக்கு ஒன்று 18 ஆண்டுகளின் முன்னர் பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. .

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More