Home உலகம் தென்னாப்பிரிக்க நில சீர்திருத்த சட்டத்தில் நில உடமையாளர்களுக்கான இழப்பீடு நீக்கப்படவுள்ளது…

தென்னாப்பிரிக்க நில சீர்திருத்த சட்டத்தில் நில உடமையாளர்களுக்கான இழப்பீடு நீக்கப்படவுள்ளது…

by admin

தென்னாப்பிரிக்காவில், நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தும் போது இழப்பீடு வழங்குவதனை தடுக்கும் வகையில், அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ராமபோசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது உரை பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

பெரும் நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கும் வகையில் நிலச்சீர்திருத்தம் செய்வதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டத் திருத்த முன்மொழிவை ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் முடிவு செய்யும் என தெரிவித்த ராமபோசா, இந்தச் சீர்திருத்தம் பொருளாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அனைவருக்குமான பொருளாதாரம், அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் வேலை என்பதற்கான சமூகத் திட்டத்தை வகுப்பதில் எல்லா தென்னாப்பிரிக்கர்களும் தங்களோடு ஒத்துழைக்கவேண்டும் எனவும் ராமபோச கோரியுள்ளார்.

இந்த வகையில் 30 சதவீத நிலங்கள் கருப்பின மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்திருந்தாலும், இனப் பாகுபாடு ஒழிக்கப்பட்ட காலத்தில் இருந்து 10 சதவீத நிலங்களே வெள்ளையின உரிமையாளர்களிடம் இருந்து கருப்பின மக்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையை அரசமைப்புச் சட்டம் வெளிப்படையாகப் பேசவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பது தெளிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள ராமபோசா அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்துக்காகவே தாங்கள் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நிலச்சீர்திருத்த நடவடிக்கை மந்தமாக இடம்பெறுவதாக மக்களிடையே கோபம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சிறுபான்மை வெள்ளையின மக்களிடம், நாட்டின் பெரும்பகுதி வளமான நிலம் குவிந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

எனினும் இந்த சீர்திருத்த நடவடிக்கையானது அயல்நாடான சிம்பாப்வேயில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போன்ற நிலப் பறிப்பு அல்லது நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையாக மாறவும் வாய்ப்பிருப்பதாக விமர்சகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.பல லட்சம் தென்னாப்பிரிக்கர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு விவசாயத்தை நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More