Home இலங்கை திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” பதாகைகள்…

திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” பதாகைகள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன. நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இக்கால பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள பகுதியினை சூழ தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் நினைவாலயத்தின் புனித தன்மை கெடாதவாறு நடந்து கொள்ளுமாறு கோரி மும்மொழிகளிலும் “புனிதம் காப்போம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபனின் பங்களிப்பில் பதாகைகள் நேற்று புதன் கிழமை இரவு கட்டப்பட்டன.

அவற்றினை இன்று வியாழக்கிழமை (பதாகை கட்டப்பட்டு சில மணி நேரத்தில்) அதிகாலை 1.32 மணிக்கு இரண்டு காவற்துறை உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புடன் வந்த சிவில் உடை தரித்த இருவர் அந்த பதாகைகளை அறுத்துக்கொண்டு தமது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் ஆனது நல்லூர் ஆலய சூழலில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளன. அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் மீண்டும் அப்பகுதியில் புதிதாக மும்மொழிகளில் பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன.

அதேவேளை கடந்த 14ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை “வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா? “ , “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா? “ என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியிருந்தனர்.

அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அந்த பணியில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்தனர். அதனால், வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி பூரணப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More