Home இலங்கை குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ளது….

குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ளது….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

வட்டுக்கோட்டை காவற்துறை பிரிவில் கடந்த ஒரு மாத கால பகுதிக்கு மேலாக மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கிய குள்ள மனிதர்களின் நடமாட்டம் தற்போது ஓய்ந்துள்ளதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 130ஆவது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது , வடக்கில் இடம்பெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வடமாகாண சட்டம் ஒழுங்கு அமைச்சர் எனும் ரீதியில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தை உறுப்பினர் சபா.குகதாஸ் முன் மொழிந்தார். குறித்த தீர்மானத்தை சபையில் முன் மொழிந்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஒரு மாத கால பகுதிக்கு மேலாக வட்டுக்கோட்டை, அராலி, சங்கரத்தை, துணைவி, சண்டிலிப்பாய் சீரணி, மாசியப்பிட்டி, ஆனைக்கோட்டை, நவாலி, மானிப்பாய் போன்ற இடங்களில் உள்ளே வீடுகளுக்கு இரவு வேளைகளில் முகத்தை மூடி கட்டியவாறு உள்நுழையும் இனம் தெரியாத நபர்கள் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி விட்டு தப்பி செல்வார்கள். அத்துடன் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதலையும் நடாத்துவார்கள். அந்த செயற்பாடுகளால் , மக்கள் கடந்த ஒரு மாத கால பகுதிக்கு மேலாக அச்சத்தில் உறைந்து மன விரக்தி அடைந்திருந்தனர்.

அந்நிலையில் இத்தகைய செயற்பாடுகளுக்கு பின்னணியில் அரச இயந்திரத்துடன் சேர்ந்தியங்கும் சிவில் உடை தரித்த நபர்கள் இருந்தனர். அவர்களை நாம் அடையாளம் கண்டு , அவர்கள் தொடர்பிலான விபரங்களை வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை  மா அதிபரிடம் கையளித்தோம்.

அதன் பின்னர் ஒரு சில நாட்களில் குறித்த சிவில் உடை தரித்தவர்கள் அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்நிலையில் தற்போது குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More