Home இலங்கை பளை காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபை தவறிழைத்துள்ளது…

பளை காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபை தவறிழைத்துள்ளது…

by admin

பளை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபை தவறிழைத்துள்ளது. என்ற குற்றசாட்டு , அரசியலுக்காக ஆற்பரிக்கும் அவச் சொல் என முதலமைச்சர் கூறியது முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாடு என வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போன்று பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது என்பார்கள். அதேபோல பளைக்காற்றாலை விடயத்தில் முதலமைச்சர் கூறுவது போன்று அத் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டுச் சபையின் அனுமதியினைப் பெற்றிருந்தவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு மேலதிகமாக மாகாண சபையின் அனுமதியும் பெறவேண்டி இருந்தது.

அந்த அனுமதி என்ன என்பதனை ஐங்கரநேசன் அவர்கள் 19.12.2014 அன்று சபையில்ஆற்றிய உரையிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. அவ் உரையில் அவர் கூறியிரு ப்பதாவது, “இந்த ஒப்பந்தத்தினுடைய பிரகாரம் இருபது வருடங்களிற்கு எங்களுடைய கௌரவ முதலமைச்சர் அந்தக் காணிக்கான அனுமதியினை வழங்கியிருந்தார்.”முதலமைச்சர் கூறுவது போல் இது தொடர்பாக ஏற்கனவே அனுமதிகள் யாவும் பெற்றிருக்கிறார்களாயின் காணி அனுமதியினை எதற்காக முதலமைச்சர் அவர்கள் வழங்க வேண்டும்? தாங்கள் கோரும் நிதியை சமூகப் பயன்பாட்டிற்குத் தருவதற்கு முதலீட்டாளர்கள் மறுத்திருப்பார்களே ஆயின் காணி அனுமதியினை வழங்காமல் இருந்திருக்கலாம்.

இது 2014ஆம் ஆண்டு பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் தற்போது ஓர் புதிய தகவல் கிடைத்துள்ளது. என்பதனைமுதலமைச்சர் புரியவில்லையா அல்லது புரியாதது போன்று பாசாங்கு செய்கிறாரா?

2016ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை தற்போதுதான் எமக்குக் கிடைத்துள்ளது. இக் கணக்காய்வு அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக இது வரை அறிந்திராத ஓர் விடயம் தரப்பட்டுள்ளது.

அதாவது 2014 டிசெம்பரிலிருந்து 2016 டிசெம்பர் வரையான காலப்பகுதிக்குள் அந் நிறுவனம் ரூ.2,933.8 மில்லியனை வருமானமாகப் பெற்றுள்ளது. அதுவும் உற்பத்திச் செலவுகள் இல்லாத வருமானம். இதில் மாகாணத்தின் சமூகப் பயன்பாட்டிற்காக வருடமொன்றிற்குக் கிடைக்கும் நிதி ரூபா. 20 மில்லியன்.

இது தொடர்பாகவே கடந்த 30.08.2018 மாகாண சபை அமர்வின் போது விவாதத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி நிரலில் தெளிவாகக் கூறப்பட்டும் இருந்தது.

இந் நிலையில் இவ்விடயத்தினைத் திசை திருப்பி,  இது அரசியலிற்காக ஆர்ப்பரிக்கும் அவச் சொல் எனவும் தாம் பதவியேற்ற காலத்து விடயங்கள் இத்தனை வருடங்களின் பின் தற்போது எழுப்படுகின்றன என்றால் அதன் அர்த்தம் என்ன என்றும் முதலமைச்சர் கூறியிருப்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

இவ்வாறு விடயங்களைத் திரிபுபடுத்திக் கூறிக் கொண்டும், தெரியாதது போல் பாசாங்கு செய்வதனையும் விடுத்து முதலமைச்சர் கடந்த ஐந்து வருட மாகாண சபைச் செயற்பாடுகள் தொடர்பாக தாம் உண்மையாகவும்,  நேர்மையாகவும் சொல்லுகின்றார் என்றால், கேள்வி – பதில் என்ற கோதாவில் அறிக்கைகள் விடுவதைத் தவிர்த்து, ஓர் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு அவரின் கூற்றுக்களை நிரூபித்துக் காட்டட்டும் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More