Home இந்தியாஇணையவழி சிறார் பாலியல் குற்றங்கள் 800 கோடி டொலர் வியாபாரமாகிப் போனது…

இணையவழி சிறார் பாலியல் குற்றங்கள் 800 கோடி டொலர் வியாபாரமாகிப் போனது…

by admin


இணையம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஆபாசப் படங்கள் 800 கோடி அமெரிக்க டொலர் தொழிலாக உருவெடுத்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். இன்றைய நவீன காலங்களில் இணையம் ஒரு இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக இணையம் என்பது குறித்த அடிப்படை புரிதல் இல்லாத இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணையத்தின் பாதிப்புகளை மட்டுமே அதிகம் அறுவடை செய்கிறார்கள்.

மறுபுறம், சிறுவர்கள் மீதான இணையவழி பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவர்களை கொண்டு எடுக்கப்படும் ஆபாச படங்களும் இணையத்தில் மிகப்பெரிய தொழிலாக மாறியுள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் நல ஆர்வலரும், நோபல் பரிசு வென்றவருமான கைலாஷ் சத்யார்த்தி கருத்து தெரிவிக்கையில்,

“இணையதளம் மூலமான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் ஆபாசப் படங்களை தடுக்க சர்வதேச அமைப்பிலான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் ஆபாச படம், குழந்தைகள் கடத்தல் 800 கோடி டாலர் அளவிலான தொழிலாக உருவெடுத்துள்ளது. இவற்றைத் தடுக்க உலக அளவில் உறுதியான கண்காணிப்பு அமைப்பு இல்லை. அந்தந்த நாட்டு அரசுகள் இவற்றை ஆரம்ப நிலையிலேயே களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சமூக விரோத அமைப்புகள் அதிநவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் நிலையில், காவற்துறையிடம் இன்னும் பழைய தொழில்நுட்பங்களே இருக்கின்றன. சர்வதேச அளவில் குழந்தைக் கடத்தல்காரர்கள் குறித்த விவர அறிக்கையை சர்வதேச காவற்துறை (இண்டர்போல்) அமைப்பும் உருவாக்க வேண்டும்’என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More