Home இலங்கை கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் – மு தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் – மு தமிழ்ச்செல்வன்

by admin
உலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுவிட்டு அப்படியே கைவிட்டுவிடுகின்ற பழக்கம் மனித இனத்திற்கே அதிகமுண்டு. உலகில் மனித நடவடிக்கைகளால் இயற்கை சூழல் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. மனித நடவடிக்கையின் காரணத்தினால் பல உயிரிணங்கள் அழிவடைந்து செல்கின்ற அதே வேளை பல ஆயிரக்கணக்கான தாவரங்களும் அழிவடைந்து செல்கின்றன. இதில் சில வகையான தாவரங்கள் இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக அழிந்துவிடும் நிலையில் காணப்படுகின்றன என உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் முடிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உலகில் இதுவரை எத்தனை வகையான தாவரங்கள் காணப்படுகின்றன என்று இதுவரை உறுதியான ஆய்வுத் தகவல்கள் எவையும் வெளிவரவில்லை இருந்த போதும்  லண்டனில் உள்ள றோயல் தாவரவியல் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சுமார் நான்கு இலட்சம் வகையான தாவர இனங்கள் காணப்படுவதாக  சொல்லப்படுகிறது. இதில் பத்து வீதமான தாவர இனங்கள் அழிவின் விழிப்பில் இருப்பதாக ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர். அத்தோடு தற்போது உள்ள தாவரங்களில்  ஜந்தில் ஒரு பகுதி பல வகையான ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இவற்றில் சில அழிந்துபோக கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்த வகையில் இலங்கையிலும் சில வகையான தாவரங்கள் அழிந்து செல்லக் கூடிய நிலையில் இருப்பதாக சூழலியலாளர்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். அதில் முக்கியமானது கண்டல் தாவரங்கள் ஆகும்.
இந்த கண்டல் தாவரங்கள் என்பது கடற்கரையோரங்களின் சதுப்பு நிலங்களில் உவர் நீரில்  வளரும் தாவரங்களாகும். இலங்கையை பொறுத்தவரை இலங்கiயின ;கரையோர மாவட்டகளில் சுமார் 8000 ஆயிரம் ஹெக்ரெயர் பரப்பளவு அளவில் கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன. இதில் புத்தளம் மாவட்த்தில் அதிகளவு கண்டல் தாவரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் அம்பாறை, மட்டகளப்பு, காலி, கம்பஹா, அம்பாந்தேட்டை, யாழ்பபாணம், களுத்துறை,கிளிநொச்சி, முல்லைத்தீவு, குருநாகல், மாத்தறை,புத்தளம், இரத்தினபுரி, இங்கே கிளிநொச்சி மாவட்டத்தில் 312 ஹெக்ரெயர் பரப்பளவில் கண்டல் தாவரங்கள் காணப்படுவதாக  இலங்கையின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வாறே யாழ்ப்பாணத்தில் 539 ஹெக்ரெயரும், முல்லைத்தீவில் 463 ஹெக்ரெயர் பரப்பளவிலும் கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன.
எவ்வாறு மனித நடவடிக்கைகளால் உலகிலுள்ள தாவரங்களும், உயிரிணங்களும்  அழிவடைந்து அல்லது அருகி வருகின்றனவோ அவ்வாறே கிளிநொச்சியிலும் கண்டல் தாவரங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, பூநகரி பிரதேசங்களில் காணப்படுகின்ற சதுப்பு நிலங்களில் அதிகளவான கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன.
கண்டல் தாவரங்கள் பறட்டைக் காடுகளாகவும், வளர்ந்த மரங்களாகவும் அடர்த்தியாக சதுப்பு நிலங்களில் வளர்க் கூடியது. இவ்வகையாக கண்டல் தாவரங்கள் மனிதனுக்கும்  சூழலுக்கும் பல நன்மைகளை தாரளமாக வழங்குகின்றன என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் மீன் மற்றும் இறால் பெருக்கத்திற்கு, கால்நடைகளின் உணவாக, கடற்கரை பாதுகாப்பு,கரியமிலவாயு அளவை குறைத்தல், கடல்வளங்களை பேணுதல், கடல் நீரை தூய்மையாக்குதல், கடல் வாழ் அங்கிகளுக்கான வாழ்விடமாக, பசளை உற்பத்திக்கு, பறைவைகளின் புகழிடமாக, மண் அரிப்பை தடுப்பது  என கண்டல் தாவரங்களின் நன்மைகளை கூறிக்கொண்டே போகலாம்.
அதவாது கண்டல் சூழல் தொகுதியானது கரையோர மீன் பிடியில் பிரதான பங்கை வகிக்கிறது. இது இளங்கடல் குஞ்சு மீன்கள் வளரும் இடமாகவும் அவற்றிற்கு உணவழிக்கும் இடமாகவும் காணப்படுகிறது. கண்டல் சூழல் தொகுதி இல்லாத இடங்களில் மீன்களின் அளவு குறைவாகக் காணப்படுகிறது.காரணம் கண்டல் தாவரங்கள் மீன்களின் வாழிடமாகவும் மீனினம் துனது எதிரிகளிடமிருந்து ஒழிப்பதற்குப் பயன்படுத்துவதோடு அதிலிருந்து விழுகின்ற இலைகள் குஞ்சுகள் என்பவற்றைக் கொண்டு கூடுகள் கட்டி அவைகளிலேயே முட்டை இட்டு ஒட்டி வளர்கின்றன.
நீரில் விழுந்து அழுகும் போசனை மிகுந்த தாவரப்பாகங்கள் அலை அடிப்பினால் நுண்ணங்கிகளுக்கு கொடுக்கப்பட்டு இந்தப் போசனைப் பதார்த்தங்கள் அழுகளுக்கு உட்பட்டு அழுகள் வளரி உணவுச்சங்கிலியின் முதல் கொழுவியாகச் செயற்பட்டு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பெரிய மீன்களை போசிக்க உதவுகின்றது.  இவ்வாறு மீனினங்களின் பெருக்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் மிக்கதாக கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன.
 கடற்கரைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டல் காடுகள் ஆற்றுமுகங்கள் கழிமுகங்கள் வாவிகளின் கரைகளைப் பாதுகாப்பதுடன் அடையல்களை வேரில் பிடித்து வைத்திருப்பதனால் வாவிகளையும் முருகற்கல் பாறைகளையும் கடலின் புற்படுக்கை என்பவற்றையும் அடையல்கள் சேராமல் பாதுகாக்கின்றது.
கண்டல் தாவரங்கள் சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உரிஞ்சும் தன்மை உடையதாக காணப்படுகிறது. பறவை விலங்குகளைகவரும் இடமாகவும் காணப்படுகிறது அத்துடன் பெருமளவான உள்ளாசப் பயனிகளை கவரும் இடமாகவும் கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன
 அத்தோடு கண்டல் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் குறைப்பதிலும் மற்றும் சூழலில் அதன் தாக்கத்தைக் குறைப்பதிலும்; பாரிய செல்வாக்குச் செலுத்தும் ஒரு தாவர இனமாகும்.
இது மட்டுமல்லாமல்; நீர்வாழ் உயிரினங்களின் இன விருத்திக்கும் அதன் தொடர்ச்சியான நிலைபேற்றுக்கும்; அவசியமான சூழலை இந்தக் கண்டல்  தாவரங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
ஆரோக்கியமான சதுப்பு நில மரங்களின் வளர்ச்சியே ஆரோக்கியமான கடல்வாழ் உயிரிகளுக்கான திறவுகோல் ஆகும். இந்த மரத்தில் இருந்து விழும் இலைகள் கிளைகள் மற்றும் கழிவுகள் கடலுக்கு ஊட்டச்சத்து என்று கூறலாம். கடலில் இருக்கும் உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான உணவினை வழங்குகின்றது
இவ்வாறு அனைத்து வகையிலும் நன்மையினை வழங்குகின்ற கண்டல் தாவரங்கள் கிளிநொச்சி மாவட்டத்திலும் சுயநலமான மனித நடவடிக்கைகளால் அழிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த கண்டல் தாவரங்களை கடற்றொழிலாளர்களே பெருமளவில் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு அழித்து வருவது கவலைக்குரிய விடயம். பளை மற்றும் பூநகரி பிரதேசங்களில் காணப்படுகின்ற கண்டல் தாவரங்கள் விறகுத்தேவைக்காகவும், வேலிகள் அடைப்பதற்காகவும், என பல்வேறு தேவைகளுக்கு அழிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் கண்டல் தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் பொறுப்பற்ற வகையில் தீ வைக்கப்பட்டு எரிந்தும் காணப்படுகின்றன.
கடற்றொழிலாளர்களை பொறுத்தவரை கண்டல் தாவரங்களை  தங்களின் வாழ்வாதார மேம்மாடு கருதி பாதுகாக்க  வேண்டியது  அவர்களின் தலையாய கடமையாகும்.  ஆனால் அவர்களே அதனை  அழிப்பது என்பது  வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானது.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை  312 ஹெக்ரெயர் பரப்பளவில் கண்டல்தாவரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையும் அழிவடைய விட்டால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலுக்கும், பெரும் பாதிப்புக்கள் ஏற்படும். எனவே கண்டல் தாவரங்களை பாதுகாக்கின்ற முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்பதோடு அதனை அழிக்காமல் இருக்கவும்  வேண்டும்.
    

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More