Home இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதியிடம் சிரித்தபடி விடைபெற்ற, போதநாயகியின் வழக்கு, நீதிமன்றம் செல்கிறது!

முச்சக்கர வண்டிச் சாரதியிடம் சிரித்தபடி விடைபெற்ற, போதநாயகியின் வழக்கு, நீதிமன்றம் செல்கிறது!

by admin

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர்  போதநாயகி நடராஜாவின் இறப்புத் தொடர்பான வழக்கு வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின் தாயார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் காவற்துறையினர் வழக்கை முன்னெடுக்கவுள்ளனர். போதநாயகியின் பெற்றோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு காவற்துறையினருக்கு உத்தரவிட விண்ணப்பம் செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி நடராஜா (29) என்ற கர்ப்பிணி பெண் கடந்த 20ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. எனினும் விரிவுரையாளரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அதனைப் பொறுப்பேற்கும் போது, அவரது பெற்றோர் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

அதனால் விரிவுரையாளரின் இறப்புத் தொடர்பான விசாரணைகளை முன்கொண்டு செல்வதில் காவற்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்கொலை தொடர்பில் நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற வகையில் காவற்துறையினர் வழக்கை முடிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. எனினும் திருகோணமலை வளாக சமூகம் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டமும் அதற்கு தாயாரை அழைத்து பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் வழக்கை முன்கொண்டு செல்ல காவற்துறையினர் தீர்மானித்தனர்.

அத்துடன், முச்சக்கர வண்டி சாரதி தானாக முன்வந்து காவற்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், “விரிவுரையாளரை பெரும்பாலான நாள்கள் நானே ஏற்றிச் சென்று அவரது தங்குமிடத்தில் இறக்குவேன். 20ஆம் திகதி வியாழக்கிழமை அவர் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இறக்குமாறு கேட்டார். பிற்பகல் 2.10 மணியளவில் அவரை கடற்கரையில் இறக்கினேன்.

ஆயிரம் ரூபா தாளை வழங்கினார். நான் மாற்றித் தருமாறு கேட்டேன். அவர் அந்தப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணத்தை மாற்றி நான் கேட்டுக்கொண்ட 400 ரூபா பணத்தை வழங்கினார். ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று அவரைக் கேட்டன். சிரித்துவிட்டுச் சென்றார்” என்று தெரிவித்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பிரகாரம் விரிவுரையாளர் கடந்த 20ஆம் திகதி இரவுதான் தண்ணீருக்குள் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பழுதடைந்ததை வைத்து சட்ட மருத்துவ அதிகாரியால் கணிப்பிடப்பட்ட நேரத்தின் அடிப்படையிலேயே அவர் இரவு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. மரணம் நடந்த சமயத்தில் செந்தூரனின் நடத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அத்துடன், கடந்த 19, 20ம் திகதிகளில் போதநாயகியின் கணவர் செந்தூரன் அலுவலகத்தில் விடுப்பு பெற்றிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் வழங்கிய வாக்குமூலத்தில், போதநாயகி தற்கொலை செய்ததாக தாயார் குறிப்பிட்டிருந்தாலும், திருகோணமலையில் செந்தூரனின் கொடுமைகளை அம்பலப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்பின் பின்னணிகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் நலன் சார்பில் வவுனியா மற்றும் திருகோணமலை சட்டத்தரணிகள் வரும் 22ஆம் திகதி நீதிமன்றில் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.

இதேவேளை, போதநாயகியின் குடும்பத்துக்கு கடந்த ஒரு வார காலமாக கடும் அழுத்தங்கள் வழங்கப்படுவதுடன் சிலரால் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More