Home இலங்கை லலித் – குகன் ஆள்கொணர்வு மனு – கைபேசி இணைப்பின் விவரங்கள் மன்றில் சமர்ப்பிப்பு –

லலித் – குகன் ஆள்கொணர்வு மனு – கைபேசி இணைப்பின் விவரங்கள் மன்றில் சமர்ப்பிப்பு –

by admin

2ஆம் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, லலித் வீரராஜின் கைபேசி இணைப்பின் விவரங்கள் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் அதிகாரியால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த நிறுவனத்தின் அதிகாரியிடம் விசாரணைகள் மற்றும் குறுக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வழக்கு எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் ஆரம்பத்தில் சாட்சியமளித்திருந்தனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர்.

அத்துடன், கடந்த தவணைக்கு முதல் தவணையில், லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை எடுத்த அச்சுவேலி காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சாட்சியமளித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று (12) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அதன் போது, மனு தாரர்களின் சட்டத்தரணிகள் மன்றில் தோன்றினர். எதிர் மனு தாரரான யாழ்ப்பாணம் இராணுவத் தளபதி சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணியும் மன்றில் முன்னிலையானார்.அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, லலித் வீரராஜின் அலைபேசி இணைப்பின் 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதி முதல் டிசெம்பர் 15ஆம் திகதிவரையான விவரங்களை குறித்த நிறுவனத்தின் பிரதம அதிகாரி நீதிமன்றில் சமர்ப்பித்து சாட்சியமளித்தார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 11ஆம் திகதிவரை ஒத்திவைத்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More