Home இலங்கை உண்ணாவிரதப் போராட்ட அரசியல்கைதியின் உடல் நிலை மோசம்

உண்ணாவிரதப் போராட்ட அரசியல்கைதியின் உடல் நிலை மோசம்

by admin

அனுராதபுரம் சிறைச்சாலையில் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற சிவப்பிரகாசம் சிவசீலன் (32) என்ற அரசியல் கைதியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் அவருடைய வழக்குத் தவணைகளுக்கு இராணுவ தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அசிரத்தையும் அக்கறையின்மையும் அவருடைய விடுதலையைத் தாமதிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவர் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர் தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தியுள்ளதனால் அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியைச் சேர்ந்த சிவசீலன் 10 வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இறுதி யுத்த நேரம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக மூன்று வருடங்களின் பின்னர் 2012 ஆம் ஆண்டிலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

யுத்தகாலத்தில் தனது சகோதரனையும், தாயையும் பறிகொடுத்த இவருக்கு அவருடைய தந்தையாரே சிறைச்சாலைக்கு வெளியில் துணையாக இருந்து வந்தார். அவரும் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திஎதி உயிரிழந்தையடுத்து, அவருடைய நலன்களைக் கவனிப்பதற்கு எவரும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற வழக்கு விசாரணைகளின் இயல்புக்கு அமைய சிவசீலனுக்கு எதிரான வழக்கும் நீண்ட கால இடைவெளி கொண்டதாகவே தவணை இடப்படுகின்றது. இதனால் வழக்கு எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் அவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More