Home இலங்கை காணி பிணக்கு கைக்கலப்பாக மாறியதில் முதியவர் உயிரிழப்பு

காணி பிணக்கு கைக்கலப்பாக மாறியதில் முதியவர் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணி பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் முதியவர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாளை சேர்ந்த செல்லன் சின்னத்துரை (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த முதியவருக்கும் , மட்டுவில் பகுதியை சேர்ந்த வேறு இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக காணி பிணக்கு நடைபெற்று வந்துள்ளது. அந்நிலையில் கடந்த 19ஆம் திகதி இரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஏற்பட்டதில் வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது இருவரும் இணைந்து முதியவரை பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.

அதில் காயமடைந்த முதியவரை அயலவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு முதியவர் மாற்றப்பட்டார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பி இருந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

முதியவர் உயிரிழந்தமை தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினரிடம் முதியவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரும் அரச உத்தியோகஸ்தர்கள் எனவும் , தாக்குதலாளிகளை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போது, தாக்குதலுக்கு இலக்கான முதியவர் சுயநினைவற்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தார் எனவும் , இருந்த போதிலும் நீதிமன்றில் தாக்குதலாளிக்கு பிணை வழங்குவதற்கு  காவல்துறை   தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என உயிரிழந்துள்ள முதியவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More