Home இலங்கை கேப்பாபுலவு – போராடும் மக்களை, நீதி மன்றிற்கு இழுத்தது காவற்துறை…

கேப்பாபுலவு – போராடும் மக்களை, நீதி மன்றிற்கு இழுத்தது காவற்துறை…

by admin

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கடந்த 26 ஆம் திகதி தங்கள் வாழ்விடங்களை விடுக்ககோரி படையினரின் முகாம் வாசலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

கேப்பாபுலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த வி.இந்திராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் க.சந்திரலீலா, நீர்கொழும்பினை சேர்ந்த யோ.விறிட்டா, பெனான்டோ ஆகியோர் மீதே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுவதால் படைமுகாமில் உள்ள படையினரின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இராணுவத்தினர் மீது குற்றச்செயல்கள் செய்யும் நிலை காணப்படுவதாகவும் காவல்துறையினர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் குற்றச்செயல்களை மேற்கொள்ளலாம் என்பதனால் போராட்டத்திற்கு வெளியில் இருந்து யாரும் வரக்கூடாது எனவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள போராட்டக்காரர்களில் ஒருவரான சந்திரலீலா தாம் காவல்துறையினரின் இந்த குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் ஒத்துக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளர். விடுவிக்கப்பட்ட தங்கள் காணிகளில் இருந்தே தாம் போராட்டம் செய்வோம் என மன்றில் தெரிவித்துள்ளதாகவும் இதற்கமைய தங்கள் போராட்டம் தொடர்பில் நீதிமன்றினால் இரண்டுநாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டத்தரணிகள், காவல்துறையினர் ,அரசதரப்பினர், மக்கள் இணைந்து போராட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு நல்ல முடிவினை எடுக்கவேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் போராட்டம் நடத்தப்படும் படைமுகாம் வாயிலில் இருந்து 75 மீற்றருக்கு அப்பால் இரண்டுநாட்களும் போராட்ட செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் சந்திரலீலா தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More