இலங்கை பிரதான செய்திகள்

தேசிய அரசு வேண்டாம் – போதையற்ற நாடும், மாகாணசபைத் தேர்தலும் வேண்டும்…

2015ஆம் ஆண்டு தம்மால்   அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கம் மக்களின் தேவையை நிறைவேற்றவில்லை. ஆகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெறும் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

“சுதந்திரத்தின் பின்னர் இதுவரை ஒரு அரசியல் ரீதியான தீர்வு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை காண முடியாமல் இருப்பது ஒரு பின்னடைவே. இந்த நூற்றாண்டுக்கேற்ப நாம் எமது பொருளாதார யுக்திகளை வகுக்க வேண்டும். அத்துடன் மாகாண சபைத் தேர்தல் ஒன்றரை வருட காலம் நடத்தப்படாமல் இருப்பது ஜனநாயகம் இல்லை. இதை பற்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏதும் பேசாதது ஏன் எனவும் இதன்போது கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக அமைச்சரவையின் அமைச்சுக்களின் எண்ணிக்கையினை அதிகரித்துக் கொள்வதற்காக, தனிப்பட்ட ஒரு கட்சியுடன் இணைந்து, தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ளமையினை கடுமையாக எதிர்க்கின்றேன்.  அமைச்சரவையில் காணப்படுகின்ற போட்டித் தன்மையின் வெளிப்பாடாகவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைப்பது நாம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வாக அமையாது.

சுதந்திரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களும் கௌரவிக்கப்பட வேண்டும். நாட்டில் பயங்கரவாத யுத்தத்திற்கு எதிராக போராடி நாம் வெற்றிக் கண்டமை நாம் பெற்ற இரண்டாவது சுதந்திரமாகவே கருதப்படும். தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பல சவால்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

வாழ்வியல் சுதந்திரத்தை நாம் பெற்றுக் கொள்வதில் பல தடைகள் காணப்படுகின்றது. போதைப் பொருள் விற்பனையின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கையை மையப்படுத்தியுள்ளமையானது வருந்தத்தக்கது. போதைப் பொருட்களின் பாவனையானது இளைய தலைமுறையினரை ஆட்கொண்டுள்ளமையானது ஒரு அடிமைத்தனமாகவே கருதப்படும். போதைப்பொருள் விற்பனை, பாதாள குழுவினரது செயற்பாடு மற்றும் பொருளாதாரத்திற்கு கரும் புள்ளியாக காணப்படுகின்ற தொழில்கள் அனைத்தும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டியவை. போதைப் பொருள் விற்பனையின் ஒரு பிரதானிகளாக அரசியல்வாதிகள் காணப்படுகின்றமை ஒரு தேசிய துரோகமாகவே கருதப்படும். இவர்கள் அனைவரும் தணடிக்கப்பட வேண்டியவர்கள்.

போதைப் பொருள் அற்ற நாடாக இலங்கை மாற்றமடையும் பட்சத்திலே முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். ஒரு மனிதன் தடைகள் ஏதும் இன்றி தனது சுதந்திரத்தையும் அனுபவித்து பிறரது சுதந்திரத்தையும் மதித்து செயற்படும் பொழுதே சுதந்திரத்தின் கருப்பொருள் உறுதிப்படுத்தப்படும். ஆகவே போதைப் பொருளினை முற்றாக அழிக்க அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டு இளைய தலைமுறையினருக்கு சிறந்த நல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அனைவரது கடமையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.