இலங்கை பிரதான செய்திகள்

சம்பந்தருடன் இணைந்து போர்க்குற்றத்தை என்மீதும் படையினர் மீதும் திருப்பிவிட ரணில் முயல்கிறார் :


ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை கூடடத் தொடரில் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் இணைந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தியா சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க அரசு, இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் போர்க்குற்றத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி வரலாற்றுத் துரோகம் செய்துள்ளதாகவும் இதன்போதும் மகிந்த ராஜபக்ச சாடியுள்ளார்.
அத்துடன், இம்முறையும் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கும் ரணில் தரப்பினர் வெட்கமின்றி ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரிட்டன், ஜேர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானத்தைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார்.அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் கொழும்பில் தங்கியிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது நிகழ்ச்சி நிரலை அவர்களிடம் கையளித்துள்ளதாகவும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச, இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ரணில் தலைமையிலான அரசு மௌனம் காப்பதாகவும், போர்க்குற்றத்தை தம்மீதும், இராணுவம்மீதும் திருப்பிவிட்டு, தப்பித்துக் கொள்வதே ரணில் அரசின் முயற்சி என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, தாம் ஐ.நா தீர்மானங்களை கண்டு அஞ்சப் போவதில்லை என்றும் அதனை இலங்கையில் நடைமுறைத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெங்களுர் நகரில், இந்திய ஆங்கில பத்திரிகை ஒன்றின் மாநாட்டில் பங்கு பற்றச் சென்றிருந்த, மகிந்த ராஜபக்ச இன்று மதியம் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.