Home இலங்கை சுமணன் கொலை வழக்கு விசாரணை 29ஆம் திகதி ஆரம்பம்

சுமணன் கொலை வழக்கு விசாரணை 29ஆம் திகதி ஆரம்பம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

சுன்னாகம் காவல்  நிலையத்தில் சந்தேகநபரைத் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு வழக்கில் சுன்னாக காவல்  நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 காவல்துறையினருக்கும் எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பமாக உள்ளது.

திருட்டு வழக்கொன்றில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சிறிஸ்கந்தராஜா சுமணனை தடுப்பு காவலில் வைத்து தாக்ககி கடும் காயம் ஏற்படுத்தியமை , கொலை செய்தமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் 10 சிவில் சாட்சிகள், 2 இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்து அதிகாரி உள்பட மொத்தம் 40 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த காவல்துறை  பரிசோதகர் நிசாந்த டி சில்வாவும் சாட்சிப் பட்டியலில் உள்ளடங்குகின்றார்.

இந்த வழக்கை ஆரம்ப விசாரணைக்காக வரும் 29ஆம் நாள் திகதியிட்டுள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், அன்றைய தினம் எதிரிகள் ஐவரையும் மன்றில் முற்படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டுள்ளது.

பின்னணி

சுன்னாகம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னரான காலப் பகுதியில் இடம்பெற்ற 35 லட்சம் ரூபா மதிக்கத்தக்க திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி சுன்னாகம் காவல்துறையினரால் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சிறிஸ்கந்தராஜா சுமணன் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார். எனினும் விசாரணைக்காக கிளிநொச்சி, வட்டக்கச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமணன் காவல்துறை காவலிலிருந்து தப்பித்து இரணைமடுக் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினரால் கிளிநொச்சி நீதிவான் மன்றில் அறியிடப்பட்டது.

இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏனைய 4 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் பெரும் குற்ற வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

அந்நிலையில் கடந்த  2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் இருவர், சுன்னாகம் காவல்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 காவல்துறையினர்  மீது சுமணனை சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மல்லாகம் நீதிமன்றின் அப்போதைய நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் சந்தேகநபர்களின் குற்றச்சாட்டுத் தொடர்பில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்தல் வழங்கினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்ட சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுப் பத்திரத்தை கிளிநொச்சி நீதிவான் மன்றில் முன்வைத்தனர்.

அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்தால்  காவல்துறை அதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 பொலிஸாருக்கு எதிராக 1994ஆம் ஆண்டு சித்திரைவதைகள் சட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

2  காவல்துறையினர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர். காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிசான்த பண்டார , திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிஷான்த பிரியபண்டார, ராஜபக்ச முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ச, கோன்கலகே ஜயன்த, ஞானலிங்கம் மயூரன் மற்றும் வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க ஆகிய 6 பேரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.

1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டுச் சட்டம், இலங்கை சித்திரவதைகள் சட்டம், உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிரான தீர்ப்புக்கள், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பன்னாட்டு நீதிமன்ற போர்க்குற்றத் தீர்ப்புக்கள், உகண்டா நீதிமன்ற சித்திரவதைக்கு எதிரான தீர்ப்பு உள்ளிட்டவைக்கு அமைவாக 6 குற்றவாளிக்களுக்கும் அதிகூடிய தண்டனையாக தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் சிறிஸ்கந்தராசா சுமணைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் 5 பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பகர்வுப் பத்திரம் மீதான சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதன் நிறைவில் சந்தேகநபர்கள் ஐவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 2016ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி கட்டளையிட்டார்.

வழக்கு மேல் நடவடிக்கைக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியால் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை 296இன் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More