Home இலங்கை சுன்னாகம் காவல் நிலையத்தில் கைதி சித்திரவதை செய்து கொலை – வழக்கு ஒத்திவைப்பு

சுன்னாகம் காவல் நிலையத்தில் கைதி சித்திரவதை செய்து கொலை – வழக்கு ஒத்திவைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேகநபரைத் தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 காவல்துறையினருக்கு எதிரான வழக்கை வரும் ஜூன் 14ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

எதிரிகள் ஐந்து பேரையும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர். அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். வழக்கை வரும் ஜூன் 14ஆம் திகதிவரை ஒத்திவைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கின் எதிரிகள் ஏற்கனவே சித்திரவதை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அநுராதபுரம் சிறைச்சாலையில் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையிலையே ஐவருக்கும் எதிராக சிறிஸ்கந்தராஜா சுமணனை ராமநாதபுரம் என்னுமிடத்தில் வைத்து தண்டனைச் சட்டக்கோவை 140ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கூடிய காயம் விளைவித்த குற்றச்சாட்டும் மற்றும் அதே இடத்தில் வைத்து அவரைக் கொலை செய்தமைக்காக 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய கொலைக் குற்றச்சாட்டும் என 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் 10 சிவில் சாட்சிகள், 2 இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்து அதிகாரி உள்பட மொத்தம் 40 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த காவல்துறைப் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவும் சாட்சிப் பட்டியலில் உள்ளடங்குகின்றார்.

பின்னணி

சுன்னாகம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னரான காலப் பகுதியில் இடம்பெற்ற 35 லட்சம் ரூபா மதிக்கத்தக்க திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி சுன்னாகம் காவல்துறையினரால் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சிறிஸ்கந்தராஜா சுமணன் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார். எனினும் விசாரணைக்காக கிளிநொச்சி, வட்டக்கச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமணன் காவல்துறைக் காவலிலிருந்து தப்பித்து இரணைமடுக் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினரால் கிளிநொச்சி நீதிவான் மன்றில் அறிக்கையிடப்பட்டது.

இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏனைய 4 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் பெரும் குற்ற வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் இருவர், சுன்னாகம் காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 காவல்துறையினர் மீது சுமணனை சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மல்லாகம் நீதிமன்றின் அப்போதைய நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் சந்தேகநபர்களின் குற்றச்சாட்டுத் தொடர்பில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்தல் வழங்கினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்ட சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுப் பத்திரத்தை கிளிநொச்சி நீதிவான் மன்றில் முன்வைத்தனர்.

அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்தால் காவல்துறை அதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 காவல்துறையினருக்கு எதிராக 1994ஆம் ஆண்டு சித்திரைவதைகள் சட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் 2 காவல்துறையினர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர். காவல்நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறைப் பரிசோதகர் திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிசான்த பண்டார உள்ளிட்ட ஆறு முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர்களும் மனித குலத்துக்கு எதிரான சித்திரவதைக் குற்றத்துக்கு குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்.

ப்பு#chunnakam #murder #toture #policestation

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More