Home இலங்கை மாணவத் தலைவர்கள் கைதுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் :

மாணவத் தலைவர்கள் கைதுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் :

by admin


நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அப்பாவி மாணவர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து கைதுசெய்தமையை கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் சமூகம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து கிழக்குப் பல்கலைக் கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்படப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை அடுத்து பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறதி செய்வதாகக் கூறி நேற்று யாழ் பல்கலைக்கழகத்தினை சோதனை செய்வதற்கு இலங்கை இராணுவம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்ததுடன் மாணவர் ஒன்றியமும் பூரண ஒத்துழைப்பினை வழங்கி இருந்தது.

இதுவரை காலமும் பல்கலைக்கழக வளாகத்தினுள் இராணுவம் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை இருந்தம் தற்காலத்தில் இடம்பெறும் பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பை இராணுவம் உறுதி செய்யும் என்ற நம்பிக்கையிலேயே இச் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கட்டடத்தில் காணப்பட்ட தமிழீழ தேசிய தலைவரது புகைப்படம் மற்றும் முள்ளிவாய்க்கல் அவலங்களைக் குறிக்கும் பதாதைகள் காணப்பட்டதனை காரணம் காட்டி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை ஊழியர் கைதுசெய்யப்பட்டு 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸ் மற்றும் இராணுவத்தினரே அப்பாவி மாணவர்கள் மற்றும் ஊழியரைக் கைது செய்தமை என்பது மனவேதனையளிக்கிறது. தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பே காரணமாக உள்ளது.

இச்சூழ்நிலையைக் காரணம் காட்டி அப்பாவி மாணவர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து கைதுசெய்தமையை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதனையும் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டி நிற்கிறோம்.

யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் இன, மத, மொழி, பேதம் கடந்து ஒற்றுமையாகவே எமது கல்வி மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நீண்ட காலத்துக்கு முன்பு வைக்கப்பட்ட புகைப்படத்தினை காரணம் காட்டி அப்பாவி மாணவர்களை கைதுசெய்தமையானது மாணவர்களின் ஒற்றுமையினை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே காணப்படுகிறது.

செய்யாத தவறிற்காககைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்களை; மற்றம் ஊழியர் விடுதலைக்கு பேதங்களைக் கடந்து அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்பதை வேண்டி நிற்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

#EasternUniversity #students #arrest #jaffnauniversity

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More