Home இலங்கை சஹ்ரானின் மடிக்கணினி அமெரிக்கா வசம் இல்லை?

சஹ்ரானின் மடிக்கணினி அமெரிக்கா வசம் இல்லை?

by admin


கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என இலங்கை அரசு கூறும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் மடிக்கணினி, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ இன் பொறுப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மடிக்கணினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலேயே உள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் இருந்து சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணினி கண்டெடுக்கப்பட்டிருந்ததுடன், அந்த மடிக்கணினியில் இருந்து விசாரணைகளுக்கு தேவையான முக்கிய சாட்சியங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் கூறினார்.

காவற்துறை தலைமையகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 293 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் 115 பேரிடம் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 178 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் மற்றும் பயங்கரவாத பயிற்சிகளை பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோர் அடங்குவதாக தெரிவித்த அவர், பயங்கரவாத சம்பவங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் 41 பேருக்கு சொந்தமான சுமார் 100 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வங்கிக் கணக்குகளில் சுமார் 134 மில்லியன் இலங்கை ரூபாய்க்கும் அதிக தொகை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத குழுக்கள் வசம் காணப்பட்ட சுமார் 20 மில்லியன் ரூபாய் பணத்தை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

அதேபோன்று பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோருக்கு சொந்தமான 6 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சஹ்ரானின் மனைவியான அப்துல்லா காதர் ஃபாத்திமா, நீதிமன்றத்தில் சுமார் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் உள்ள இவரிடம் இதற்கு முன்னர் 2 முறை ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More