Home இலங்கை மக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும்! – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….

மக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும்! – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….

by admin

தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் செப்டம்பர் 16ஆம் தேதி தமிழீழம் உட்பட உலகம் முழுவதும் நடைபெறவிருக்கும்..

‘எழுகதமிழ்’எழுச்சிப் பேரணியின் கோரிக்கைகள் வெற்றிப் பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ‘ தமிழர்களின் பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு, மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்; சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நம்பத்தகு விசாரணைகள் நடைபெறவேண்டும்; வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் நிறுத்தப்படவேண்டும்; இடம்பெயர்ந்த- புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் அனைவரையும் அவரவருக்குரிய பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்த வேண்டும் ’ என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இந்த எழுச்சிப்பேரணியில் பங்கேற்க வேண்டுமென தமிழ்ச்சொந்தங்கள் யாவருக்கும் அழைப்பு விடுத்துள்ள தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களின் இம்முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

போர்க்குற்றம் மற்றும் இனக்கொலை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் பன்னாட்டுப் பொறிமுறை விசாரணை நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறத்தி ஏற்கனவே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம் என்பதைத் தமிழ்ச்சமூகம் நன்கு அறியும். தற்போது அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த எழுச்சிப்பேரணி வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துவதோடு, அதே நாளில் தமிழகத்தில் நடைபெறும் எழுகதமிழ் எழுச்சிப் பேரணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கிறது என அறிவிக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறத்தக்க வகையில் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் ஒற்றுமையாகத் திரண்டெழ வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவண்:
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்
விசிக

மக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும்! – தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை..

ஈழத் தமிழர்தம் துயரம் சொல்லில் விவரிக்க முடியாதது. தமக்கென்று தனியான வரலாறு, தனியான அரசு, செழுமைமிக்கப் பண்பாடு, மொழி வளம் நிலப்பரப்பு என யாவும் கொண்ட தனித்துவமான மக்கள் கூட்டத்தின் வாழ்வில் குறுக்கே வந்தது பிரித்தானியாவின் காலனியாதிக்கம். தீவை விட்டகன்ற பிரித்தானியா தனது புவிசார் அரசியல் நலனுக்காக சிங்கள பெளத்த பேரினவாதத்திடம் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஒப்படைத்து சென்றது. 1948 முதல் இன்றைக்கு வரை இலங்கை தீவைப் பெளத்தமயமாக்கும் பேரினவாத நிகழ்ச்சி நிரலில் ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது.

திட்டமிட்ட கலவரங்கள், பௌத்த மயமாக்கல், இன ஒடுக்குமுறைச் சட்டத் திருத்தங்கள், மொழி ஒடுக்குமுறை, இன மேலாதிக்க யாப்பு, நிறைவேற்று அதிகாரம் படைத்த இலங்கை அதிபர் பதவி, பயங்கரவாத தடுப்புச் சட்டம், இராணுவமயமாக்கல் என இன அழிப்பின் பரிமாணங்கள் விரிந்து சென்றன. அதில் ஒரு மைல்கல்லாய் முள்ளிவாய்க்காலில் இரத்தம் பெருக்கெடுத்து ஓட இலட்சக்கணக்கான தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப் பட்டனர்.

தமிழீழ தனியரசு கோரிப் போராடிய தமிழர்களது போராட்ட நியாயம் உலகத்தால் ஏற்கப்படவில்லை. பிராந்திய வல்லரசுகளும், உலக வல்லரசுகளும் உரிய அரசியல் தீர்வு காண உதவவில்லை. இனப் படுகொலையைத் தடுக்க வில்லை என்பதோடு இன அழிப்புக்குத் துணைப்போயின. இன அழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தமிழீழ மக்களுக்கு சுதந்திர அரசு இன்றியமையாதது என்பதை முள்ளிவாய்க்கால் ஓலங்கள் உணர்த்தி நிற்கின்றன. தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வருவது திட்டமிட்ட இனப் படுகொலை என்று உலகத்தை ஏற்க செய்து ஈடுசெய் நீதி காணும் போராட்டத்தில் ஈழத் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் உறுதியாய் நிற்கக் காண்கிறோம். அந்த உறுதியை வெளிக்காட்டும் முகமாய் காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படும் எழுக தமிழ் பேரணியில் திரளும் அனைத்து அரசியல் மற்றும் சிவில் தலைமைகளுக்கும் ஒன்று கூடவிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இலங்கை அரசானது பன்னாட்டுச் சட்டங்களைக் காலில் போட்டு மிதித்தது மட்டுமின்றி சொந்த நாட்டுச் சட்டங்களையும் மதிக்காதவர்கள் தாம் சிங்களப் பேரினவாதிகள் என்பதைக் கடந்த ஆண்டு இறுதியில் உலகம் கண்டது. உள்நாட்டு விசாரணை என்று உலகை ஏமாற்றிவரும் இலங்கையின் நீதிபரிபாலனமுறை எப்படிப் பட்டது என்பதை 2005 இல் திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படையினரால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் கடந்த ஜூலையில் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டமை காட்டிநிற்கின்றது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பொறுப்புக்கூறலுக்கான தீர்மானங்களை தாமே கொண்டு வந்து அதை ஏற்றுக்கொள்ளும் இலங்கை அரசு உள்நாட்டில் போர்க்குற்றம் செய்த படைத் தலைவர்களுக்கு பதவி உயர்வு தந்து பாராட்டுகிறது. போர் நடந்த போது 58வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா பல்வேறு மனித உரிமை அறிக்கைகளிலும் போர்க்குற்றங்களுக்காகவும் மானுட விரோதக் குற்றங்களுக்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர். அவருக்குத் தான் இராணுவ படைத் தலைவராக பதவி உயர்வு தந்திருக்கிறது இலங்கை அரசு. இலங்கை தீவின் அரசமைப்புச் சட்டம், நீதித்துறை, புலனாய்வு நிறுவனங்கள், ஊடகம், அரசியல் தலைமை என அனைத்து நிறுவனங்களும் இன அழிப்புக்கும் இன அழிப்பு செய்வோரைப் பாதுகாப்பதற்கும் உறுதி பூண்டுள்ளன. சிங்கள பெளத்தப் பேரினவாதம் தமிழர்களுக்கு நீதி வழங்கவோ அரசியல் தீர்வு கொடுக்கவோ மாட்டாது என்பதை முள்ளி வாய்க்காலுக்குப் பின்னான இப்பத்தாண்டுகளும் பளிச்சென்று காட்டி நிற்கின்றன.

ஆனால், இலங்கை அரசின் உண்மையான முகத்தையும் எழுபது ஆண்டுகால ஏமாற்று வரலாற்றையும் தொடர்ந்து வரும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்பையும் எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் மக்களின் அரசியல் விருப்பத்தையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளோ அதை செய்யத் தவறிவிட்டனர். இதுதான் எல்லாத் துயரங்களிலும் பெருந்துயரமாக தமிழ் மக்களின் தலைகளில் விடிந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை சமரசமின்றி வெளிப்படுத்தி உலகத்தின் முன்பு கொண்டு செல்ல வேண்டிய கடமையை நிறைவேற்றும் அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவதே இன்றைக்கு ஈழத் தமிழர்கள் முன்விரிந்து கிடக்கும் முதற்பணி. அந்தப் பணியை செய்வதில் ஒரு மைல்கல்லாக இந்த மக்கள் திரள் எழுச்சி அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மக்களின் கோரிக்கைகள் சட்ட வடிவம் பெறுவதும் சட்டத்தில் இருக்கும் உரிமைகள் மக்களுக்குப் பயன்படுத்துவதும் தானாக நடந்து விடுவதில்லை. கோடிக்கணக்கான மக்களின் விடாப்பிடியானப் போராட்டத் தாலும் கண்ணீராலும் இரத்தத்தாலும் சட்டங்கள் உயிர்ப்பெறுகின்றன. எனவே, ஈழத் தமிழர்களின் போராட்ட அழுத்தமே சர்வதேச மாந்த உரிமை சட்டங்களுக்கு உயிர் கொடுத்து ஈழத் தமிழர்களைப் பாதுகாத்து நிற்கப் போகின்றது.

தனித்துவிடப்பட்டோம் என்று ஈழத் தமிழர்கள் கலங்கி நிற்க வேண்டாம். புலம்பெயர் வாழ் தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் உலகம் முழுவதும் நீதியின்பாற் பற்றுக் கொண்டு ஒடுக்கப்பட்டோருக்காக உழைத்து வருவோரும் உங்களோடு உணர்வுபூர்வமாக நிற்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் மக்கள் பேரவையின் வரலாற்று சிறப்புமிக்க எழுக தமிழ் பேரணியின் கோரிக்கைகளை ஐ.நா. மன்றமும் இந்தியா அமெரிக்கா, உள்ளிட்ட அனைத்து அனைத்துலக நாடுகளும் உணர்ந்து ஈழத் தமிழர்களிற்கான நீதியை விரைந்து வழங்க முன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.
நன்றி
வாய்மையே வெல்லும். நீதியின் ஒளிக்கதிர்கள் விடியலைத் தரும்.

நீதிபதி அரிபரந்தாமன்
நீதிபதி சண்முகம்
நீதிபதி ராஜன்
நதிபதி சிவசுப்பிரமணியன்
நீதிபதி அக்பர் அலி
ஒய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ,
தமிழ் நாடு, இந்தியா

 

செயலாளர் நிறைவேற்றுக்குழுஉறுப்பினர்
திரு.அ.கN;ஜந்திரன் அருட்தந்தை.வீ.யோகேஸ்வரன்

தளராத உறுதியுடன் எழுக தமிழராய் பேரெழுச்சிகொள்க! புரட்சித்தமிழன் சத்தியராச் அழைப்பு!

தளராத உறுதியுடன் யாழ் முற்றவெளி நோக்கிய எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று பேரெழுச்சிகொள்க என உங்களுள் ஒருவனாக கேட்டுக்கொள்வதாக தமிழ்த் திரைப்பட நடிகர் புரட்சித் தமிழன் சத்தியராச் விடுத்துள்ள காணொளிப் பதிவின் ஊடாக அழைபுவிடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

யாழ் முற்றவெளியில் வரும் திங்கட்கிழமை 16 ஆம் திகதி தமிழினப் படுகொலைக்கு சர்வதேச அரங்கில் நீதி கேட்டு மிகப்பெரும் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் உறவுகள் இதில் கலந்துகொண்டு தங்களுடைய ஆதரவுக் கரத்தினை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. நாம் தளர்ந்துவிடாது போரடிக்கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட போராட்டாமாகவே யாழ் முற்றவெளியில் தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்படவிருக்கிறது. இவ் எழுக தமிழ் நிகழ்வில் தளராத உறுதியுடன் எழுக தமிழராய் பேரெழுச்சி கொள்ளும் வகையில் ஆதரவுக்கரம் நீட்டுமாறு உங்களுள் ஒருவனாக கேட்டுக்கொள்கின்றேன் என எழுக தமிழுக்கு ஆதரவு தெரிவித்து விடுத்துள்ள காணொளிப்பதிவில் புரட்சித் தமிழன் சத்தியராச் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை

ஊடகஅறிக்கை 15.09..2019

‘எழுகதமிழ் 2019’ – தமிழ்சமூக செயற்பாட்டாளர் இணையத்தின் ஆதரவும்

2009 ம் ஆண்டுமேமாதம் தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதிலிருந்து தமிழ்மக்களிற்கான அரசியல் தலைமை இடைவெளி இன்றுவரைகாணப்படுகின்றது. அந்தவகையில் தமிழ்மக்களின் ஏகோபித்த குரலாக அரசியல் சாராத, கட்சிபேதமின்றி, மக்கள் இயக்கமாகதமிழ் மக்கள் பேரவை உதயம் பெற்று பலமக்கள் எழுச்சிப் போராட்டங்களை வடக்கு,கிழக்கு எங்கும் முன்னெடுத்துவருகின்றது. தமிழ் மக்கள் பேரவைக்கு எந்தக் கட்சி உரிமைகோரினாலும் அது ஒருபொதுவான ‘மக்கள் எழுச்சி இயக்கம்’என்பதில் மக்கள் தெளிவாகஉள்ளனர் என்பதைகட்சிகள் புரிந்துகொண்டுள்ளன.

‘எழுகதமிழ் 2019’ காலத்தின் கட்டாய எழுச்சி நிகழ்வாகும், காலத்திற்குக் காலம் நாம் எமது இழப்புக்களையும், அநீதிகளையும் வெளிக்கொணராவிட்டால் ‘தோற்கடிக்கப்பட்ட இனம்’ என்றமுத்திரை எம் சந்ததியினர்ருக்கு குத்தப்பட்டுவிடும், எம் இனம் ஓர் அடிமைசாசனம் எழுதப்பட்டவர்கள் போல் ஆகிவிடுவோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலமக்கள் இயக்கங்களும், எழுச்சிநிகழ்வுகளும் நடைபெறுவதால்தான் எமதுதமிழ் மக்களின் இருப்பு ஓரளவிற்கேனும் புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றது, அந்தவகையில் ‘எழுகதமிழ் 2019’கடந்தபத்து வருடங்களாக அறவழிப் போரிலும், சாத்வீகமாகவும் போராடிக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களிற்கு ஓர் உந்துசக்தியாக அமைவதுடன் எமது பத்துவருடகாலக் கோரிக்கைகளிற்கு மீண்டும் அதிஉச்ச அழுத்தம் கொடுப்பதாகவும் அமையும்.

அண்மைக்காலமாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளும்,அரசாங்கமும் தமிழ் மக்கள் விடயத்தில் வடக்கிற்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பதும் கிழக்குத் தமிழர்களைபாராமுகமாக இருந்துவருவதும் வடக்குகிழக்குமக்களால் உணரப்பட்டுவருகின்றது ஆனால் தமிழ்மக்கள் பேரவைவடக்குக் கிழக்கு இணைந்த ‘தமிழர் தாயகம்’என்றபின்னனியில் செயற்பட்டுவருவதுமகிழ்ச்சியளிக்கின்றது. இருந்தும் தமிழ்மக்கள் பேரவையும் காலத்தின் தேவையைஉணர்ந்துவடக்குக் கிழக்கு இணைந்தஅரசியற் கலப்பற்றமக்கள் பிரதிநிதிகளைஉள்வாங்கிதம்மைமீள்கட்டமைப்புச் செய்துகொள்ளவேண்டும் என்றஉண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எனினும் ‘எழுகதமிழ் 2019’ இன் கோஷங்கள் பேரம்பேசுதலிற்குஅப்பாற்பட்டவையும்,தமிழ் மக்களிற்கானதற்சமயதேவைகளில் மிகவும் அடிப்படையுமானவைஎன்றவகையில் தமிழ் சமூகசெயற்பாட்டாளர்கள் இணையமும் ‘எழுகதமிழ் 2019’ இற்கு எமது பூரண ஆதரவினை வழங்கி ஒன்றிணைவதில் மகிழ்வடைகின்றோம். இதில் அனைத்துதமிழ் உறவுகளையும் பங்குகொள்ளுமாறு கேட்டு;க்கொள்கின்றோம்.

 

15/9/2019 இன்று நியூசிலாந்து ஆக்லாந்து தமிழர்களால் தாயகத்தில் நடாத்தவிருக்கும் எழுகதமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து எழுற்சிப்போராட்டம் நடாத்தப்பட்டது

ஆக்லாந்து நகரத்தின் மத்தியில் உள்ள “Aotea Square, Queen Street, “எனும் இடத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்கள் கலந்துகொண்டனர் இந்நிகழ்வை  குருபரன்  தொகுத்து வழங்கினார், தொடர்ந்து நியூசிலாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் இணைப்பாளரும்,நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சருமான வைத்தியகலாநிதி.  வசந்தன். அவர்கள் உரையாற்றினார்

அவர் தனதுரையில். தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அழித்து பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் தன்னெழிற்சியோடு தமிழ் மக்கள் தங்களுக்கான விடுதலைக்கு போராடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது சொந்த மண்ணிலே அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்துகொண்டு போராடிக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கான ஆதரவு தெரிவித்து நாம் நடாத்தும் இப்படியான போராட்டங்களின் ஊடாக உலகெல்லாம் பரந்துவாழும் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் தொடர்ந்து பதாகைகள் ஏந்தி நின்ற இளையோர்களால் இப்போராட்டம்பற்றி வேற்றுநாட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டதுடன் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டது

ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
15/09/2019.

அமெரிக்க எழுகதமிழில் சிவாஜிலிங்கம் சிறப்புரை ! அணிதிரள அழைப்பு !!

 
https://youtu.be/Gvx6KR5CFjA

யாழ் முற்றவெளியில் இடம்பெறும் எழுகதமிழ் எழுச்சி நிகழ்விற்கு சமாந்திரமாக, அமெரிக்காவில் இடம்பெறுகின்ற எழுகதமிழ் எழுச்சி நிகழ்வில் வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், டொரோ பிரதிநிதியுமாகிய சிவாஜலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கின்றார் என அறிவிக்கப்பட்டள்ளது. நியு யோர்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை முன்றலில் இவ் எழுச்சி நிகழ்வு மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இடம்பெறுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் வட அமெரிக்காவின் பல்வேறு தமிழர் அமைப்புக்களும் எழுகதமிழ் நிகழ்வினை முன்னெடுத்துள்ளன. இதேவேளை, கனடாவில் இருந்து எழுகதமிழ் நிகழ்வில் பங்கெடுப்பதற்கான போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More