Home இலங்கைஇலங்கையில் கடும் மழை – 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையில் கடும் மழை – 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

by admin

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக கடும் மழையுடனான வானிலையினால் 20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் 6730 குடும்பங்களைச் சேர்ந்த 25006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் 14,077 குடும்பங்களைச் சேர்ந்த 54,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலியில் வீடொன்றில் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காலி மாவட்டத்தில் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 30 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 819 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

இலங்கையில் கடும் மழை : 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

3696 குடும்பங்களைச் சேர்ந்த 14,899 பேர், 42 தற்காலிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம்

கேகாலை, காலி, களுத்துறை, ரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

அதேவேளை, களு, கிங் மற்றும் நில்வா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால், அத்தனகல்லு ஓயா ஆற்றில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதிகள், குறுக்கு வீதிகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், மதத்தலங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்கள் பலவற்றில் வெள்ள நீர் தேங்கியமையினால். வாகன போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் கடும் மழை : 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்வோர் விமானம் புறப்படுவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருகைத் தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு விமான நிலைய நிர்வாகத்தினால் இந்த வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.    #இலங்கை  #கடும்மழை  #பாதிப்பு

பிபிசி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More