இலங்கை பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

அதிபர் இன்றி பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வரும் புதுவெளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை


நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுவெளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையானது அதிபர் இன்றி இயங்கி வருவதாகவும், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தளபாட வசதிகள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் புதுவெளி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

புதுவெளி முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் 1 முதல் தரம் 9 வரையான வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.குறித்த பாடசாலையின் அதிபர் கடந்த 5 மாதங்களுக்கு முன் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் இன்று வரை புதிய அதிபர் எவரும் குறித்த பாடசாலைக்கு நியமிக்கப்படவில்லை.
மேலும் அதிபர் தரமில்லாத ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள் ளதுடன் 18 ஆசிரியர்கள் தேவையாக உள்ள இடத்தில் 8 ஆசிரியர்களே உள்ளார்கள். மேலும் கேட்போர் கூடத்தில் தடுப்புச்சுவர்கள் இல்லாமல் வகுப்புகள் இடம் பெற்று வருகின்றது.

இதனால் ஆசிரியர்களினால் பாடம் நடத்த முடியாது உள்ளதுடன் மாணவர்களினால் கற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும் கணிதம் ,அழகியல் ,உடற்கல்வி ,மனையியல் ,ஆங்கிலம் ,இஸ்லாம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.

இதனால் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கையில் பாரிய பின்னடைவு நிலவுவதாகவும் ஏற்கனவே இந்த பாடசாலைக்கு என்று நியமித்த ஆசிரியர்கள் சிலர் பாடசாலைக்கு வராமலே இடமாற்றம் பெற்று சென்றுள்ளதாகவும் புதுவெளி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் வலயக்கல்வி பணிமனையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,,,

முன்பு இருந்த அதிபர் மன்னார் துள்ளுக்குடியிருப்பு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். இந்தநிலையில் கறித்த பாடசாலையின் அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான முயற்சியகள் நடை பெற்று வந்தது.

அதற்குள் ஜனாதிபதி தேர்தல் வந்து விட்டது. தேர்தல் திணைக்களத்தின் அறிவித்தலின் படி நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை புது நியமனங்கள் எதுவும் வழங்க இயலாது. நவம்பர் மாதம் 30ஆம் திகதியின் பின் குறித்த பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்படுவார்.அந்த பாடசாலையில் இடைக்கால அதிபராகவே ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் விஞ்ஞானம் , கணிதம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிப்பது கல்வி அமைச்சு.கூடுதலாக ஜனவரியின் பின்னர் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்.மன்னார் கல்வி வலயத்தில் 323 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. தேசிய பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. காலப் போக்கில் தான் இவை நிவர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என மன்னார் வலயக்கல்வி பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  #அதிபர்  #புதுவெளி  #பாடசாலை

 

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.