Home இலங்கை ராஜித்தவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு…

ராஜித்தவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு…

by admin

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (27.12.19) பிற்பகல் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ராஜித்த சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது….

Dec 27, 2019 @ 08:20

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரால் நாரஹேன்பிட்டிய வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். (செய்திப் பின்னணி) கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நடைப்பெற்ற வௌ்ளை வேன் கடத்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ராஜித்த சேனாரத்னவுடன் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துக்களை தெரிவித்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கடந்த 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (26) மற்றும் நேற்று முன்தினம் (25) ராஜித்த சேனாரத்னவின் கொழும்பில் உள்ள வீட்டிற்கும் பேருவளையில் உள்ள வீட்டிற்கும் சென்றிருந்த போதிலும் அவர் அந்த இடங்களில் இருக்கவில்லை.

இந்த பின்னணியில், தம்மை கைது செய்வதற்கு எதிராக நீதிமன்ற பிடியாணையை பெற்றுக் கொள்ள ராஜித்த சேனாரத்ன நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அதனை அவரின் சட்டத்தரணிகள் நேற்று (26) மாலை விலக்கிக்கொண்டனர்.

இவ்வாறான நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்றிரவு (26) நாரஹேன்பிட்டியவில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் நேற்றிரவு ராஜித்த சேனாரத்னவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ள லங்கா வைத்தியசாலைக்கு சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையிலே, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று மதியம் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜித்தவை சந்திக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை சந்திக்க நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாரஹேன்பிட்டிய லங்கா தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபர் ரஹ்மான் மற்றும் கலாநிதி ஆஷூ மாரசிங்க ஆகியோர் இவ்வாறு சென்றிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், ராஜித்த சேனாரத்னவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More