Home இலங்கை கொரோனா வைரஸ் – 213 பேர் பலி – சர்வதேச ரீதியில் அவசரநிலை பிரகடனம்…

கொரோனா வைரஸ் – 213 பேர் பலி – சர்வதேச ரீதியில் அவசரநிலை பிரகடனம்…

by admin


புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை தவிர வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

குறைந்தளவு ஊட்டச்சத்தை கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவுவது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 18 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் அதனால் 98 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும் வேறு நாடுகளில் கொரோனா வைரஸால் எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, பாக்., தாய்லாந்து, மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியதையடுத்து சர்வதேச சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது. இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் 5 முறை, உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

2009 – எச்1என்1(H1N1)

2014 – போலியோ

2014 – எபோலா (வட ஆப்ரிக்கா)

2016 – ஜிக்கா

2019 – எபோலா (காங்கோ)

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 213-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 9700 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ´´ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்´´ என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக போராடிவரும் சீனா குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் மைக் ரயான், ´´கொரோனா வைரஸ் அளிக்கும் சவால் கடுமையாக இருந்தாலும், அதனை சமாளிக்கும் பணியை சீனா சிறப்பாகவே செய்து வருகிறது´´ என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும். ஆனால் அதன் பின் கொரோனா வைரஸ் சீனா எங்கும் பரவியது. மேலும் தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது .

இதனை குணப்படுத்த பிரத்யேக மருந்து அல்லது மருத்துவமுறை எதுவும் இல்லை. ஆனால் சிகிச்சைக்கு பிறகு ஏராளமான மக்கள் குணமாகியுள்ளனர். இந்நிலையில், சீன நாட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல விமான சேவை நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிஃபிக் விமான நிறுவனங்கள் சீனாவிற்கான விமான சேவைகளை குறைத்துள்ளன. அதே நேரத்தில் லயன் ஏர் நிறுவனம், சீனாவிற்கு விமான சேவையை மொத்தமாக நிறுத்தியுள்ளது.

சீனாவுக்கு சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று பயணிக்கவுள்ளதாக தெரிவித்த மைக் ரயான், அங்குள்ள மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை சர்வதேச குழு அறிந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

´மிகவும் இக்கட்டான மற்றும் முக்கியமான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்´´ என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த வாரத்தில் சீனாவுக்கு சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ், ´´தற்போதைய சூழலில் சீனாவுக்கு உலகின் ஆதரவு மிகவும் தேவை´´ என்று குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More