Home இலங்கை இலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்..

இலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்..

by admin

இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (08) புது டெல்லியில் அமைந்துள்ள ராஸ்டிரபதிபவனில் பாரத பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இதன்போதே இந்திய பிரதமர் இந்த  விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர், “இந்தியா முழு இந்து சமுத்திரம் தொடர்பிலும் அக்கறை கொண்டுள்ளது. வெறுமனே இலங்கையின் நிலைப்பேறு தன்மை மற்றும் பாதுகாப்பு அமைதி ஆகியவற்றை உறுதிபடுத்துவது மாத்திரம் எமது நோக்கம் அல்ல. இதனால் இலங்கையுடனான எமது உறவு முதன்மையானது, கொள்கைகள் மற்றும் சமுத்திரக் கோட்பாடுகளுக்கு இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவோம். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு இந்தியாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கும் விடயங்களை வரவேற்கின்றோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் எமக்கிடையிலான கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பொலிஸார் இந்தியாவின் முன்னணி பயிற்சி நிலையங்களில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை முன்னெடுக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்களுக்கு தேவையான சமத்துவம், நீதி, அமைதி மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என நம்புகின்றேன். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, இரு நாட்டின் கூட்டு பொருளாதார திட்டங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம். தீவிரவாதம் பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஆகவே தீவிரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, “இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் கடன் உதவி வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக 50 மில்லியன் டொலரை கடனாக வழங்கியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இந்திய பயணத்தின் போது இந்தியா வழங்குவதாக உறுதியளித்த கடன் உதவிகள் தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையில் இந்தியாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தினோம். இந்தியாவால் வழங்கப்படும் இவ்வாறான உதவிகள் இலங்கையில் கிராம புற மக்களின் நலன்களுக்கு பயன்படும்.´

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை இன்று முற்பகல் சந்தித்து கலந்துஐரயாடியமை குறிப்பிடதக்கது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் மகாத்மா காந்தியின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

மேலும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைநகர் டெல்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் இன்று மாலை சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More