Home இலங்கை முன்னாள் போராளி விடுதலை

முன்னாள் போராளி விடுதலை

by admin

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை  யாழ். மேல் நீதிமன்றம் விடுவித்தது. இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.

முல்லைத்தீவு கோப்பாபிலவு முள்ளியவளையைச் சேர்ந்த காளிமுத்து மகேந்திரன் அல்லது தமிழ்ப்புலவன் என்ற முன்னாள் போராளியே குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக் கடற்படையினரைத் தாக்கியளிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கொழும்பு 4ஆம் மாடியில் வைத்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் நலம்புரி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி காளிமுத்து மகேந்திரன், இராணுவத்தினரின் நெளுக்குளம் மறுவாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு 2 ஆண்டுகள் மறுவாழ்வளிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், சில ஆண்டுகளில் பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டம்  2 (II) இன் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் உண்மை விளம்பல் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தியதுடன் எதிரி சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையாகியிருந்தார். உண்மை விளம்பல் விசாரணையின் நிறைவில் எதிரி காளிமுத்து மகேந்திரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நம்பகரமானது இல்லை என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், கடந்த ஜனவரி 24ஆம் திகதி கட்டளை வழங்கினார். அதனடிப்படையில்  இந்த வழக்கை முன்கொண்டு செல்வது தொடர்பில் சட்ட மா அதிபரின் விளக்கத்துக்கு இன்று மார்ச் 6ஆம் திகதிவரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது. சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன், எதிரிக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீதான விளக்கத்தை நிறுத்திக்கொள்வதாக மன்றுக்கு அறிவித்தார். அதனால் எதிரியை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளையிட்டது. #முன்னாள்போராளி   #விடுதலை #பயங்கரவாதத்தடைச்சட்டம் #தமிழீழவிடுதலைப்புலிகள்  #கோப்பாபிலவு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More