Home இலங்கை தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

by admin

(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று  (06.05.2020 ) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டதாகவும், ஒரே தடவையில் கூடுதல் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த போராட்டம் மேபீல்ட் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சலுகை கடன் அடிப்படையில் சில உணவு பொருட்களை வழங்குவதற்கு தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருந்தன.

பெருந்தோட்ட மனிதவள நிதியம் உட்பட இன்னும் சில தரப்புகளின் தலையீட்டுடன் மாதம் 3000 ரூபாய் பெறுமதியான உலர், உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றும், பின்னர் ஜீன், ஜீலை மாதத்திலிருந்து தவனை அடிப்படையில் அக்கொடுப்பனவு அறவிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சலுகை கடன் அடிப்படையில் வழங்கப்படும் உலர் உணவு பொருட்களுக்கான கொடுப்பனவை ஜீன் மாதத்திற்கு பிறகே அறவிடப்படும் என தோட்ட நிர்வாகம் முன்னதாக கூறியிருந்தது.

இருந்தாலும் இம்மாதத்திலிருந்தே இக் கொடுப்பனவு அறவிடப்பட்டுள்ளது. இது பெரும் அநிதியாகும். 1650 ரூபாய்க்கு உலர், உணவு பொருட்கள் வழங்கிவிட்டு ஒரே தடவையில் அறவிடுவது மனிதநேயமற்ற செயல் என போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் கருத்து வெளியிட்டனர்.

அத்தோடு, கடந்த மாதத்தில் உரிய முறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளமும் எடுத்தவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இக் கொடுப்பனவுக்கான கட்டணம் அறவிடப்பட்டுள்ளமையானது மனிதநேயமற்ற செயலாகும் என தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் மேபீல்ட் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

கட்டணம் அறவிடுவது பற்றி கடந்த மாதம் 28ம் திகதியே தோட்ட தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திடீரென நேற்று (05.05.2020) வந்து தான் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.

அதேபோல் 3300 ரூபாய்க்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. ஆகவே 1650 ரூபாய்க்கு தான் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற குற்றசாட்டு ஏற்றுக் கொள்ள முடியாது.

இப்பகுதியில் உள்ள கஷ்டமான குடும்பங்களுக்கு இனிவரும் காலப்பகுதிகளிலும் நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் அவர்  மேலும் தெரிவித்தார். #தோட்டதொழிலாளர்கள்   #போராட்டம்  #கொரோனா

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More