Home உலகம் சீன ஜனாதிபதியை விமர்சனம் செய்த பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி நீக்கம்..

சீன ஜனாதிபதியை விமர்சனம் செய்த பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி நீக்கம்..

by admin


சீன ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் அவரது அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததற்காக பேராசிரியர் ஜூ சாங்ருனை சிங்குவா பல்கலைக்கழகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சிங்குவா பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் ஜூ சாங்ருன். இவர் ஜனாதிபதி  ஜின்பிங் தலைமையிலான சீன அரசை வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகிறார்.

சீனாவில் கொரோனா பரவிய காலத்தில் ஜனாதிபதி ஜின்பிங் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் தணிக்கை விவரங்கள் குறித்து ஜூ சாங்ருன் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படும் பொருளாதார மந்தநிலை அரசியல், கல்வி மற்றும் சமூக சீர்குலைவுடன் நாட்டின் மீதுள்ள நம்பிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜனாதிபதி பதவியை ஜின்பிங் நீட்டித்ததுக்கு எதிராகவும் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்த கட்டுரை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஜூ சாங்ருன் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. எனினும் இது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் அவரது அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததற்காக பேராசிரியர் ஜூ சாங்ருனை சிங்குவா பல்கலைக்கழகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை மீறி அரசுக்கு எதிராக கட்டுரைகளை எழுதி வந்ததால் பேராசிரியர் ஜூ சாங்ருன் பணி நீக்கம் செய்யப்படுகிறார்” தெரிவிக்கப்பட்டுள்ளது.57 வயதான ஜூ சாங்ருன் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்குவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More