மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.
சுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்த தாய் என்ற செய்தி தொடர்பாக எழுந்த பிரச்சினை குறித்து அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல் நிலையத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி முறைப்பாடு ஒன்றினை வளர்ப்பு தாயான நூறுல் இன்ஷான் என்பவர் மேற்கொண்டிருந்தார்.
இதற்கமைய இன்று(5) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.சம்மாந்துறை காவல்துறையினருக்கு வழங்கிய அறிக்கையை அடிப்படையாக கொண்டு விசாரணையை நீதிவான் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது சிறுவனின் வளர்ப்பு தாய் என உரிமை கோரும் நூறுல் இன்ஷான் மற்றும் சுனாமியில் மகனை பறிகொடுத்ததாக தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா ஆகியோர் முன்னிலையாகி தத்தமது நியாயங்களை முன்வைத்திருந்தனர்.
சுனாமியில் மகனை பறிகொடுத்ததாக தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியாவிற்காக சட்டத்தரணிகள் முன்னிலையாகி இலவசமாக வாதாடினர்.
குறித்த இவ்விரு தாய்மாரின் கருத்துக்களையும் செவிமடுத்த நீதிவான் குறித்த வழக்கில் உண்மையான தாயை இனங்காண விவாகரத்து பெற்று சென்ற இவ்விருவரின் கணவன்மார்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முன்னிலையாகி மரபணு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சுனாமியில் மகனை பறிகொடுத்ததாக தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா தனது மகனை றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் எனவும் வளர்ப்பு தாய் என உரிமை கோரும் நூறுல் இன்ஷான் என்பவர் முகம்மட் சியான் எனவும் நீதிமன்ற வாசலில் அழைத்து தத்தமது அன்பை பரிமாறியமை அனைவரதும் கவனத்தை ஈர்த்தது. #மகனுக்காக #கோரிக்கை #மரபணுபரிசோதனை #DNA #சுனாமி
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/10/f-24-1024x576.jpg)