Home இலங்கை மருதனார்மடம் சந்தை – தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கே கொரோனா! முன்னைய தகவலை திருத்தினர்…

மருதனார்மடம் சந்தை – தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கே கொரோனா! முன்னைய தகவலை திருத்தினர்…

by admin

மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக 31 பேருக்கு கொரோனோ தொற்று என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தன.அவர்களில் 6 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு பெறப்பட்ட மாதிரிகளில் போதுமான கூறுகள் இல்லை எனவும், அவர்களிடம் மீளவும் மாதிரிகள் பெறப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட குடும்பத்தலைவரின் மனைவி (வயது-38) மகள் (வயது-12), மகன்கள் (6 மற்றும் 3 வயதுடைய) இருவர், மாமியார் (வயது-63) மற்றும் மைத்துனர் (வயது-25) ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது.

அதனையடுத்து அவர் கோவிட் – 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலில் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களில் உள்ளவர்கள் என 394 பேரிடம் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன.

மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவு இன்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மட தொற்றாளருடன் தொடர்பு – 31 பேருக்கு கொரோனா தொற்று! (முன்யை செய்தி)

December 12, 2020 1:05 pm

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் நேற்றுக் கண்டறியப்பட்ட தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 24 பேருக்கும், தொற்றாளரின் உறவினர்கள்7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான
மாதிரிகள் இன்று சனிக்கிழமை காலை பெறப்பட்டன.

மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கு
கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.

உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும் 38 வயதுடைய குடும்பத்தலைவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த புதன்கிழமை எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் ஒருவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.

இந்த நிலையில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. அதன் போதே 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More