Home இலங்கை இலங்கையின் இரண்டாவது நீர்வீழ்ச்சியின் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்

இலங்கையின் இரண்டாவது நீர்வீழ்ச்சியின் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்

by admin

(க.கிஷாந்தன்)

இலங்கையில் சுற்றாடலை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இலங்கை அரசினால் கடந்த காலம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் நமது நாட்டுக்கு வருகின்ற உல்லாச பயணிகள் விரும்ப கூடிய சுற்றுலா மையங்கள் பல நமது நாட்டில் காணப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கையில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகளுக்கு தனி ஒரு பெருமை உள்ளது. அணைவரும் விரும்பக்கூடிய பல நீர்வீழ்ச்சிகள் இலங்கையில் ஈரவலப் பிரதேசங்களான மலையக பிரதேசத்தை உள்ளடக்கியே இவைகள் காணப்படுகின்றன.

இதன் அடிப்படையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகள் உலக வரைபடத்திலும் கூட சிறந்து விளங்குகின்றது. அதி உயரமான நீர்வீழச்சிகளை இலங்கையில் பார்ப்போமேயென்றால் அதிக முக்கிய பங்கை ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டமும் கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை கொஸ்லந்தை பிரதேச சபைக்குட்பட்ட கொஸ்லந்தை வெல்லவாய பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள தியலும நீர்வீழ்ச்சி இலங்கையின் இரண்டாவது அதி உயரம் கொண்ட நீர்வீழ்ச்சி என யாவரும் அறிந்த விடயம்.

இந்த நீர்வீழ்ச்சியானது 722 அடி உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சியினை பார்வையிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் அதிகமாக வந்து செல்வது ஒரு சிறப்பம்சமான விடயமாகும்.

பண்டாரவளை பூனாகலை பிரதேசத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆற்றின் நீர் தியலும நீர்வீழ்ச்சியின் ஊடாக வழிந்தோடுகின்றது. வற்றாத நீர்வீழ்ச்சியாக பெருமைக்கொண்டுள்ளது இந்த தியலும நீர்வீழ்ச்சி.

ஈரவலப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை பலரும் பிரதான வீதியிலிருந்தே கண்டு இரசிக்கின்றனர். ஆனால் இந்த நீர்வீழ்ச்சியின் உயர பகுதியில் சிறப்பு மிக்க அம்சங்களை காணமுடியும் என்பது பலரால் உணரப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த நீர்வீழ்ச்சியின் உயரப்பகுதிக்கு உள்நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் செல்வது இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றது. அங்கே உயரத்திலிருந்து வேறு பிரதேசங்களை அவதானிக்க கூடிய இரம்மியமான காட்சிகளை காணக்கூடிய பல சந்தர்ப்பங்கள் உண்டு.

கொஸ்லந்தை பிரதேச சபையின் ஊடாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த தியலும நீர்வீழச்சியின் உச்சபகுதி அசுத்தமான சூழ்நிலை கொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு பிரதான காரணம் அங்கே நீர்வீழ்ச்சியின் உச்சத்திற்கு செல்வோர் சூழலை மாசடையும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் காணப்படுவதாக கண்டறியப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் சூழலுக்கு பங்கம் விளைவிக்காது பராமரிப்பதாகவும், உள்நாட்டு பயணிகள் சூழலை மாசுப்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்த நீர்வீழ்ச்சியின் உச்சப்பகுதியில் சமைத்து உணவு உண்கின்றார்கள், ஆனால் சமைக்கும் பொருட்களையும் அங்கு இடப்படுகின்ற கற்களலான அடுப்புகளையும் அகற்றுவதில்லை. அடிவாரத்திலிருந்து கொண்டு செல்லும் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர்

எஞ்சிய உணவுகளை வீசிவிடுகின்றனர். அதனால் துர்நாற்றங்கள் ஏற்படுகின்றது. அங்கு வளர்ந்துள்ள கற்றாளை செடிகளில் பெயர்களை பதித்து அச்செடிகளை நாசமாக்குகின்றனர்.

மது பாவித்து போத்தல்களை உடைத்து மாசப்படுத்துகின்றனர். அங்கு மரங்கள் வெட்டப்படுகின்றது. அதனூடாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படுகின்றது. அக்கூடாரங்களில் சமூக விரோத செயற்பாடுகளை முன்னெடுகின்றனர். குறிப்பாக பெண்களை அழைத்து செல்வோர் அங்கு தேவையற்ற செயல்களில் ஈடுப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

ஆங்காங்கே அமைக்கப்படுகின்ற கூடாரங்கள் அகற்றப்படுவதில்லை. இதுபோன்ற விடயங்களால் அந்த நீர்வீழ்ச்சியின் உச்சபகுதி மாசுப்படும் அளவிற்கு மோசமான நிலையை கொண்டுள்ளது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்படும் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. எனவே கொஸ்லந்தை பிரதேச சபை இது குறித்து கவனத்திற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. #இலங்கை #நீர்வீழ்ச்சி #சூழல் #உல்லாச_பயணிகள் #ஊவா #பதுளை #தியலும_நீர்வீழ்ச்சி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More