Home இலங்கை சேவை வழங்கலில் தாமதம் -சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசனம்

சேவை வழங்கலில் தாமதம் -சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசனம்

by admin

யாழ்.மாவட்ட செயலகத்தில் இயங்கும் காணி பதிவக அலுவலகத்தில் கொரோனா சுகாதார நடைமுறைகளை அலுவலர்கள் கடைப்பிடிப்பதில்லை எனவும் , சேவை பெற வருவோரை அலைக்கழிப்பதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. 


கடந்த காலங்களில் ஒரு சேவையாக இருந்த நடைமுறைகள் ஒருநாள் சேவை , சாதாரண சேவை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் சேவையின் போது , சாதாரண சேவையை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடப்படுகின்றது. 


குறிப்பாக தோம்புக்கு விண்ணப்பித்தால் ,கடந்த காலங்களில் இரண்டு மணி நேரத்திற்குள் எடுக்க முடியும். தற்போது சாதாரண சேவை , ஒருநாள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , சாதாரண சேவை எனில் 100 ரூபாயாக உள்ள கட்டணம் ஒரு நாள் சேவை எனில் 200 ரூபாய் என அறவிடப்படுகின்றது. 


இரண்டு மடங்கு கட்டணம் அதிகமாக செலுத்தி காலை 10 மணிக்கு முதல் விண்ணப்பித்தாலும் மாலை 3 மணிக்கு பின்னரே பெற்றுக்கொள்ள முடியும். சாதாரண சேவைக்கு விண்ணப்பித்தால் மறுநாள் மாலை 3 மணிக்கு பின்னரே பெற்றுக்கொள்ள முடியும் இந்த நடைமுறைகளால் தூர இடங்களில் இருந்து வரும் சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 


ஒருநாள் சேவை பெறுநர் மற்றும் சாதாரண சேவை பெறுநர் ஆகியோரை மாலை 03 மணிக்கு பின்னர் வருமாறு கூறுவதானால் , அலுவலக நேரம் 04 மணியுடன் முடிவடைவதனால் பலரும் குறித்த ஒரு மணி நேரத்திற்குள் சமூகமளிப்பதனால் , அங்கு பெருமளவானவர்கள் ஒன்று கூடுகின்றனர். இதனால் கொரோனா சுகாதார நடைமுறைகள் எவையும் கவனித்தில் எடுப்பதில்லை. 


இதேவேளை உறுதி பிரதி எடுப்பதற்கு விண்ணப்பிப்போர் கீழ் தளத்தில் தமது விண்ணப்பங்களை கையளித்தால் , அதனை சரி பார்த்த பின்னரே கட்டணம் அறவிடுவார்கள். இதற்கான அலுவலகம் இரண்டாம் மாடியில் உள்ளது. 


சாதாரண நபர் கீழ் தளத்தில் விண்ணப்பத்தை கையளித்தால் , விண்ணப்பங்கள் குறிப்பிட்ட தொகை சேர்ந்த பின்னரே இரண்டாம் மாடிக்கு அவற்றை சரி பார்க்க எடுத்து செல்வார்கள். பிறகு அத்தனையும் சரி பார்த்த பின்னரே கீழே கொண்டு வந்து கண்டனம் அறவிட்டு பற்றுசீட்டு வழங்குவார்கள். இதற்காக விண்ணப்பித்தவர்கள் கீழ் தளத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மேல் காத்திருப்பார்கள். அனைத்து விண்ணப்பத்தையும் ஒரே தடவையில் கொண்டு வந்து அவற்றுக்கான கட்டணத்தை அறவிட்டு பற்று சீட்டு வழங்கும் போது விண்ணப்பித்த அனைவரும் ஓர் இடத்தில் கூடுவார்கள். 


உறுதி பிரதி எடுப்பது முன்னர் ஒரே சேவையாக இருந்த போது குறுகிய நேரத்திற்குள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சாதாரண சேவை , ஒருநாள் சேவை என மாற்றப்பட்டு மாலை மூன்று மணிக்கு பின்னர் வழங்கப்படுவதனால் அவற்றை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் ஒன்று கூடுகின்றனர்.

சாதாரண சேவைக்கு 500 ரூபாய் அறவிடப்படும் நிலையில் ஒருநாள் சேவைக்கு 1000 ரூபாய் அறவிடப்படுகிறது. 
நாட்டில் அனைத்து சேவைகளையும் இலகுவாக பெற்றுக்கொள்ள கூடியதாக மாற்றம் பெற்று வரும் நிலையில் ஒப்பிட்டு அளவில் இலகுவாக பெற்ற சேவை ஒன்றினை மாற்றம் செய்து கட்டணங்களை அதிகரித்து உள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். 


இந்நிலையில் நாட்டில் கொரோனா அச்சம் அதிகமாக காணப்படும் நிலையில் ஓர் அரச அலுவலகத்தில் அது தொடர்பில் அக்கறையின்றி அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் செயற்படுவது தொடர்பில் பலர் விசனமடைந்துள்ளனர். 

குறிப்பாக  கொரோனா சுகாதார நடைமுறைகள் தொடர்பில் மாவட்ட செயலரே அறிவிப்புக்களை விடும் நிலையில் தனது செயலக வளாகத்தில் உள்ள அலுவலகம் தொடர்பில் கவனத்தில் கொள்ளாதது தொடர்பில் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.  #கொரோனா #சுகாதார_நடைமுறை #காணிபதிவகஅலுவலகத்தில் #கட்டணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More